Friday, June 28, 2013

இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு 52 வருட சிறைத்தண்டனை ! கொழும்பு மேல் நீதிமன்றம்

இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு தலா 52 வருட சிறைத் தண்டனையம் இதற்கு மேலதிகமாக தலா 52 இலட்ச ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரீதி பத்மன் சூரசேன நேற்று தீர்ப்பளித்தார்.

உக்ரேன் பிரஜைகளான யூஷமார்க் என்ற நபரும் பியோஸ்கி மஸ்கின் என்ற நபருமே இவ்வாறு தண்டனைக் குள்ளாகினர். குறித்த இரண்டு உக்ரேன் பிரஜைகளும் போலியாக தயாரிக்கப்பட்ட 99 கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏ.ரி.எம். இயந்திரங்கள் ஊடாக பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதுடன் இவர்கள் ஒவ்வொருவர் மீதும் 26 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒவ்வொரு வருக்கும் தலா 2 வருடம் வீதம் 52 வருடகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 இலட்சம் ரூபா வீதம் 52 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது.

நீர்கொழும்பு, கடற்கரை வீதியிலமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்கள் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து போலி கிரடிட் கார்ட்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அரசுடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

2012 மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக் குள் வென்னப்புவ, சீதுவ, ஜாஎல, நீர் கொழும்பு, நிட்டம்புவ, யக்கல, கட்டு நாயக்க, சிலாபம் போன்ற பகுதிகளில் ஏ.ரி.எம். இயந்திரங்களில் பண மோசடிகள் செய்துள்ளனர் கொமர்ஷியல் வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கிக்குரிய கிரடிட் கார்ட்டுகளையே பயன்படுத்தி 111 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்படும் போது போலியாக தயாரிக்கப்பட்ட 99 கிரடிட் கார்ட்டுகளும் வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment