Sunday, May 5, 2013

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பொலிஸில் முறைப்பாடு.

வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராக உள்ளார் நடராசா ஆனந்தராசா. ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரான இவர் கடந்த நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குக்குளைப் பெற்றார். ஆனால் விருப்பு வாக்குகளின் வரிசையில் 3ம் இடத்தில் நின்ற முன்னாள் பா.உ சிவாஜிலிங்கம் நகர சபையின் தலைவர் பதவி தனக்கே வழங்கப்படவேண்டும் என அடம்பிடித்தார்.

அதற்கு கூறப்பட்ட காரணம் பிரபாகரனின் தாய் தந்தையரை அவரது பெற்ற பிள்ளைகளே கைவிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்களை பொறுப்பேற்;று இறுதி கிரிகைகள் வரை தானே நடாத்தி வைத்தவன் என்பது.

ஆனால் பிரபாகரனின் பெற்றோரின் உடலத்தை தகனக்கிரிகை செய்ததற்காக வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.

மாநகரசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரமெடுத்த நாள் தொட்டு தமிழ் தலைவருக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் ஆனந்தராஜாவிற்குமிடையே போர் இடம்பெற்றே வருகின்றது.

கடந்த 27ம் திகதி அம்மன் கோவில் திருவிழா நேரத்தில் ஆனந்தராஜாவிற்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த துண்டுப்பிரசுரங்கள் சிவாஜிலிங்கத்தாலேயே விநியோகிக்கப்பட்டதாகவும் இதனால் தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்தராசா வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதேச சபையின் பிரதித் தலைவரும் சிவாஜிலிங்கத்தின் நெருங்கிய சகாவுமான சதீஸ் தன்னை போத்தலால் தாக்க முற்பட்டார் என ஆனந்தராசா சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பொலி ஸ் நிலையித்தில் முறைப்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நகரசபை நிர்வாகத்தை எங்களிடம் கையளியுங்கள் மக்களுக்கு சேவை செய்யப்போகின்றோம் என்றவர்கள் தங்களுக்குள்ளே போட்டியிட்டு காலத்தை கழிக்க மக்கள் தொடர்ந்தும் மந்தைகளாகவே இருக்கின்றனர் என்பது வேதனைக்குரியது என்கின்றனர் ஆர்வலர்கள்.

1 comment: