Saturday, May 25, 2013

வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கோண பாதையில்!

வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் முக்கோண பாதையில் ஒன்றாகக் காட்சியளிக்கும் அரியதொரு நிகழ்வை இலங்கையர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இதனை நாளையும், நாளை மறுதினமும் வானில் காணமுடியும். இம் மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வானத்தின் வடமேல் திசையில் தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சூரிய அஸ்தமனமாகி 30-45 நிமிடங்களில் இவற்றை தெளிவாக காணமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்றதொரு காட்சியை நாம் மீண்டும் 2026 ஆம் ஆண்டிலேயே காணமுடியுமென விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதுமட்டுமன்றி எதிர்வரும் சில தினங்களுக்கு இக்கோள்களை வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள் தத்தமது சுற்று வட்டப்பாதையில் ஒன்றை ஒன்று நெருங்கி வருவதை கடந்த சில வாரங்களாக காணக்கூடியதாகவுள்ளதாகவும் தற்போது புதனும் அவற்றுக்கு நெருங்கி வருவதால் முக்கோண பாதையில் அவை காட்சியளிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பார்வைக்கு இவ்வாறு தோன்றிய போதிலும் இவற்றுக்கிடையிலான உண்மையான தூரம் பல மில்லியன் கிலோமீற்றர்களாகும்.
இலங்கை மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் உள்ளோர் இக்காட்சியை கண்டுகளிக்கவுள்ளனர்.

இதேபோன்று இன்று வானத்தில் சந்திரகிரகணமொன்று ஏற்படவுள்ளதாகவும் இதை அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ளோர் தெளிவாகக் காணமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com