Thursday, May 23, 2013

இலங்கையின் ஐக்கியத்திற்காக இந்தியா தொடர்ந்தும் பாடுபடுமாம்! அசோக் கே காந்தா

இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்திற்கும் அதன் பின் விளைவுகளுக்கும் பிரதான காரணி இந்தியா என்பதில் எவருக்கும் சந்தேகங்கள் இல்லை. தமிழ் குழுக்களை வளர்த்து விட்டது முதல் அந்த குழுக்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அவர்களை மோதவிட்டு கொலை செய்யப்பண்ணியது வரை இந்தியாவின் பங்களிப்பு வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்த இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இலங்கையில் ஐக்கியத்திற்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைபாட்டை பாதுகாப்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. இதற்காக இந்தியா தன்னாலான அனைத்து பங்களிப்பையும் வழங்கும் என அவர் தெரிவித்தார். ஆதிகாலம் தொட்டு இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகும். அந்நட்பு தொடர்ந்தும் நிலைத்திருக்கும் எனவும் அசோக் கே காந்தா இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையின் இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகர் என்ற வகையில் பாரிய சேவையாற்றி தாயகம் திரும்பும் அசோக் கே காந்தாவை கௌரவிக்கும் வகையில் விசேட வைபவமொன்று கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வைபவத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த சமரசிங்க, சாலிந்த திஸாநாயக்க மற்றும் பிரபல, கலைஞர்கள், புத்திஜீவிகள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment