Monday, May 27, 2013

மண்ணுக்காக போராடும் அமைப்பு : றோ வின் அடுத்த சீனி மிட்டாய்.

தம்மை அர்ப்பணிக்கிறதாம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு....!

இலங்கையில் இடம்பெற்ற அத்தனை அவலங்களுக்கும் வித்திட்டது இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையான றோ வும் என்பது மக்கள் மனதிலிருந்து என்றும் அகலாத வடு. 1980 களின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் எனும் சீனி மிட்டாயை திணித்தனர். இந்தியாவின் பசப்பு வார்த்தைகளை நம்பிய வடகிழக்கு இளைஞர் யுவதிகள் இந்தியா கபடநோக்குடன் வழங்கிய இராணுவப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டதுடன் இலங்கைக்கு எதிராக இந்தியா வழங்கிய ஆயுதங்களையும்தம் கைகளில் ஏந்தினர். ஒரு நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டிய இளைஞர் சமூகத்தை அந்த நாட்டுக்கு எதிராக போராடத் தூண்டி, ஆயுதங்களையும் ஆயுதப்பயிற்சிகளையும் வழங்கிய வரலாற்றுத் துரோகத்திலிருந்து இந்தியா ஒருபோதும் விடுபடமுடியாது!!

இந்தியா தமிழீழம் என்ற வார்த்தையை வெளியே தெரிவித்திருந்தாலும் நிபந்தனையுடனேயே பயிற்சிகளையும் ஆயுதத்தையும் வழங்கியது. என்ன அந்த நிபந்தனை? "இலங்கை அரசு தமிழீழத்தை உங்களுக்கு தந்தாலும் , அதை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது!" இலங்கையிலே தமிழீழம் மலர்ந்தால் அது இந்தியாவின் இறைமைக்கு பாதிப்பாக அமையும் என்பது அந்த நிபந்தனைக்காக கூறப்பட்ட காரணம். ஆனால் இந்த விடயம் சாதாரண போராளிகளுக்கோ, மக்களுக்கோ கடைசிவரை சொல்லப்படவில்லை. ஏன்? இன்றும் தமிழக அரசியல்வாதிகள் , இலங்கைத் தமிழருக்கு இறுதித் தீர்வு "தமிழீழந்தான்" என்கின்றனர். இது கேலிக்குரியவிடயம்.

இந்தியாவின் இந்தக் கபடநாடகத்தை தமிழ் அமைப்புக்களிலிருந்த சிலர் உணரத் தொடங்கினார்கள். இந்தியா தமிழ் மக்களை அதாள பாதாளத்தில் தள்ளப்போகின்றது என்பதையும் , அந்த அபாயத்திலிருந்து தமிழ் மக்கள் மீள வேண்டுமானால், போராட்டம் சிறந்த பாதையில் செல்லவேண்டுமானால் இந்தியாவின் பொறியிலிருந்து விடுபட்டு இயக்கங்கள் சுயமாக தமது போராட்டத்தை முன்னெடுக்வேண்டும் என்றும் இந்தியாவின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்பட முடியாது என்றும் முடிவு செய்தார்கள். அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. (இது இயங்கங்களிலிருந்த ஒரு சில முன்நோக்கு கொண்டோரால் மாத்திரம் முயற்சிக்கப்பட்டது என்பதும் ஏனையோர் இன்றும் இந்தியாவின் முள் தின்னும் ஏவல் நாய்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

தமது தேவைக்காக வளர்க்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தம் கைப்பொம்மைகளாக இருக்கப்போவதில்லை என்பதை ஆபத்தாக உணர்ந்த இந்தியா இவ்வியக்கங்களை அழித்தொழிப்பதை விட வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தது. இயங்கங்களிடையே உட்கட்சி முரணபாடுகளை தோற்றுவித்ததுடன் நின்று விடவில்லை. மேலும் சகல இயக்கங்களுக்கும் எதிராக புலிகளை ஏவியது. விடுதலை அமைப்பாக நின்ற புலிகள் இயக்கம் பாசிசக்கொள்கைளை வரிந்து கட்டியது. ஏகப்பிரதிநிதித்துவ மோகம் கொண்டு சகல இயக்கங்களையும் தடைசெய்து அதன் உறுப்பினர்கள் கொடூரமாக கொன்றொழித்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது. போராட்டம் பயங்கரவாதமாக மாற்றம் பெற்றது.

பயங்கரவாதத்தை இலங்கையில் அழித்தொழிக்க உலக நாடுகள் அணிதிரண்டன, வல்லரசான சீனாவும் நட்பு நாடான பாகிஸ்தானும் இதற்குத் தனது உச்சகட்ட ஒத்துழைப்பை வழங்கின. சீனா, பாக்கிஸ்தானுக்கு போட்டியாக இந்தியா போருக்கான தனது சக்திக்கு மீறிய உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது. ஆனால், இந்தியா இலங்கைக்கு உதவி செய்ததன் நோக்கத்தை இலங்கை மக்களும் அதன் அரசாங்கமும் உணராமல் இல்லை.

இலங்கையிலே புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டமையால் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பை விட இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பு பேரிழப்பாகும். இந்தியா எத்தனை உத்திகளை மேற்கொண்டாலும், இலங்கை அரசும் அதன் மக்களும் இந்தியா இலங்கைக்கு செய்த துரோகங்களை மறப்பதற்கு தயாராக இல்லை. இந்தியாவுடனான தொடர்பினை துண்டிக்கவேண்டும் என்றும் மாறாக சீனா பாகிஸ்தானுடான உறவை மேம்படுத்தவேண்டும் என்றும் அரசின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்தியா இலங்கையினால் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்து கொண்டு , தனது காலை தொடர்ந்தும் இலங்கையில் பதித்து வைத்துக்கொள்வதற்காக தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கின்றது. அதன் பிரகாரம் தற்போது ‘இலங்கையில் மண்ணுக்காக போராடும் அமைப்பு’ எனும் பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்க முனைகின்றது. இந்த அமைப்பு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது. இதற்கான மேற்பார்வைகளை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் துணைத்தூதுவர் மகாலிங்கம் மேற்கொள்வதாக அறியக்கிடைக்கின்றது.

இந்தியாவினால் தயாரிக்கப்படுகின்ற புதிய சீனி மிட்டாயை தமிழ் மக்கள் மத்தியில் விற்பனை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகின்றது. இந்தச் சீனி மிட்டாய் வலிகாமம் மக்களை இலக்காக கொண்டதாக உள்ளது.

‘வலிகாமம் மக்களின் காணிகளுக்காக போராடுவோம். அவர்களுக்காக 5000 வழக்குகள் பதிவு செய்வோம்’ என்றெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கூறப்படுகின்றது. அதற்கு பின்னணியில் மேற்படி அமைப்பு உள்ளது. வலிகாமம் மக்களின் காணியில் என்னடா இந்தியாவுக்கு இவ்வளவு அக்கறை என்ற கேள்வி உங்களிடம் எழலாம். காரணம் இல்லாமல் இல்லை.

இலங்கை அரசாங்கம் யாழ்பாணத்தின் பாதுகாப்பு வலயத்தை விஸ்தீரணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன் நிமித்தம் வலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களிலுள்ள காணிகளை உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. அந்தக்காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட்டால், அங்கே இந்தியாவை கண்காணிப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்படலாம் என இந்தியா அச்சம் கொள்கின்றது.

எனவே இதை தடுப்பதானால் இராணுவ முகாம் விஸ்தரிப்புக்கு காணி கிடைக்கப்பெறுவதை தடுக்க வேண்டும் எனக் கருதுகின்றது இந்தியா. எனவே ஐயாயிரம் அல்ல, ஐம்பதாயிரம் வழக்குகளையும் முடிந்தால் தாக்கல் செய்யும். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகின்ற நன்மை எதுவும் இல்லை.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு கல்லில் இரு பெரிய மாங்காய்கள். ஒன்று எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் காணிக்காக போராடுகின்றோம் என வாக்குகளை அபகரித்து ஆசனங்களைக் கைப்பற்றி தொடர்ந்தும் கொழும்பில் உல்லாசம் அனுபவிக்கலாம்..... இரண்டாவது ஐயாயிரம் வழக்குக்கு என இந்திய அரசிடம் பண சூட்கேசுகளை பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல தமது எஜமானர்களுக்கு விசுவாசத்தை உறுதி செய்யலாம்....

3 comments :

ஈய ஈழ தேசியம் ,  May 27, 2013 at 9:29 PM  

இலங்கையில் இடம்பெற்ற அத்தனை அவலங்களுக்கும் வித்திட்டது இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையான றோ வும் என்பது மக்கள் மனதிலிருந்து என்றும் அகலாத வடு.

இந்த இந்தியாவின் கொடூரத்தை எந்த ஒரு இலங்கையனும் எந்த காலத்திலும் மறக்க கூடாது.

Anonymous ,  May 28, 2013 at 10:00 PM  

TNA has long history of selling political confectionery products,accordingly to the political taste bud of tamils.

ARYA ,  May 31, 2013 at 2:38 AM  

நீங்கள் சொல்லும் இந்த இயங்கங்களிலிருந்த ஒரு சில முன்நோக்கு கொண்டோர்கள் தான் இவ்வளவு , அழிவுக்கும் காரணம் , தாம் இணைந்திருந்த அமைப்புகளை உடைத்து நலிவடைய செய்த காரண கர்த்தாக்கள் , எந்த உறுதியும் விசுவாசமும் இல்லாது சோறு கிடைக்குமே என இயக்கத்தில் இணைந்தவர்கள்.

இந்தியன் சொல்லுறான் என்றால் உங்களுக்கு எங்கே போனது சுய அறிவு , அப்படியானால் ஈழத் தமிழரெல்லாம் முட்டாள் கூட்டங்கள் தான் , மூளையற்ற எடுப்பார் கை பிள்ளைகள் தான்.

ஆனால் இவர்களால் இந்த நாடுக்கு ஏற்பட்ட அழிவு எவ்வளவு ? உயிர் உடமை சேதங்கள் ? இதை இந்த முட்டாள் கூட்டங்கலலோ அல்லது அவர்களில் எயமானர்கள்லோ ஈடு கட்ட முடியுமா ? சீனாதான் இத ஈடு கட்டும் அளவு உதவிகளை அள்ளி வழங்குகின்றது , அவர்களே எமது உண்மை நண்பர்கள் , அவர்களை உள்வாங்குவதே இலங்கைக்கு நல்லது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com