Wednesday, May 15, 2013

சூழ்ச்சிகளை கண்டித்து கொழும்பில் இன்று எதிர்ப்பு பேரணி!

அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை கண்டித்து கூட்டு தொழிற்ச்சங்க சம்மேளனம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 30 வருடகால யுத்தத்தின் பின்னர் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனவும், இதை உலகிற்கு எடுத்துக்காட்டவும் தாய்நாட்டிற்கு எதிராக தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகளை முறியடிக்க இப் பேரணி நடத்தப்படுகிறது என கூட்டு தொழிற்ச்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணி கூட்டு தொழிற்ச்சங்க சம்மேளனத்தின் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் கூட்டு தொழிற்ச்சங்க சம்மேளனம் பேரணியில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவ்வேண்டுகோள் அறிக்ககையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது "உலகில் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு இலங்கை அரசாங்கம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பல துறைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மக்களின் பொருளாதார நிலை உயர்வடைந்துள்ளது. அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டத்தின் ஊடாக கிராம மக்களுக்கும் மின்வசதி வழங்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன".

இவ்வாறான நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக சூழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அதில் பொதுமக்கள் சிக்கிவிடக் கூடாது. நாட்டு மக்களின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இன்றைய பேரணியில் கலந்துகொள்ளுமாறு கூட்டு தொழிற்ச்சங்க சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment