Saturday, May 18, 2013

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப் பற்று தேர்தல் பின்நோக்கிச் செல்வதால் வடமாகாணசபைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது- பி.தே.ஆ

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் விரைவில்! வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதி!

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பின்நோக்கிச் செல்வதால் வடமாகாணசபைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

இலங்கையில் உள்ள 337 உள்ளுராட்சி சபைகளில் 335 சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்து நீதிமன்றத்தின் ஊடாக தற்காலிக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது இந்த இரண்டு சபைகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து சாதகமான முடிவுகிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இவ்வாறு தீர்வு கிடைத்தால் இரண்டு சபைகளுக்குமான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த இரண்டு சபைகளுக்கான தேர்தல் பின்நோக்கிச் செல்வதால் இது வடமாகாணசபைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இந்த சபைகளுக்குரிய தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர் என்றும், கடந்த 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி யாழ் மாவட்டத்தில் 426,703 வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில் 70, 085 வாக்காளர்களும், வவுனியா மாவட்டத்தில் 96, 702 வாக்காளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 59, 409 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68,584 வாக்காளர்களுமாக மொத்தம் 721, 488 வாக்காளர்களாக பதிசெய்துள்ளனர்.

யுத்த காலப்பகுதியல் உயிரிழந்த மற்றும் காணாமல் போனாவர்கள், மற்றும் புலம்பெயர் தேசத்தில் இருந்தவர்களது பெயர் விபரங்களும் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டுக்கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அவர் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு மேற்கொள்ளும் போது அனைவரது விபரங்களும் சரியான முறையில் ஆய்வு செய்து பதிவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment