Tuesday, May 28, 2013

பஸ் டிக்கட்டுக்கற் முறையில் புதிய மாற்றம்! அறிமுகமாகின்றது முற்கொடுப்பனவு அட்டை

பஸ் டிக்கட்டுக்களுக்கு பதிலாக, முற்கொடுப்பனவு அட்டை முறையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அது குறித்து, பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுக முறையை முன்னெடுப்பதற்கு, மக்கள் வங்கி உதவ முன்வந்துள்ளதாகவும், அதன் தலைவர் காமினி செனரத்துடன் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றதாகவும், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முற்கொடுப்பனவு அட்டைகளை செலுத்தி, பஸ் வண்டிகளில் பயணம் செய்யும் முறை பல்வேறு நாடுகளில் அமுலில் உள்ளதாகவும், குறித்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துவது சிறந்தது எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படும் பஸ்வண்டிகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை, வெற்றியளிக்கும் பட்சத்தில் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இதேவேளை தூர இடங்களுக்கான பஸ் சேவையிலும் முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment