Wednesday, May 29, 2013

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவரை மீண்டும் நியமியுங்கள். யாழ் பல்கலை்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ் பல்கலைக்கழக இசைத்துறை 3 ம் வருட மாணவர்கள் இன்று காலை 11 மணியளவில் மருதனார்மடம் இராமநாதன் நுண்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சுமார் 60 மாணவர்கள் பங்குபற்றிய இவ்வார்ப்பாட்டத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் முன்னாள் இசைத்தறை தலைவர் தர்சானந்தை மீள நியமிக்க கோரி பல்வேறு கோசங்களுடன் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு இசைத்துறையின் ஒருசில விரிவுரையாளர்கள் ஆதரவு தெரிவித்ததை காணமுடிந்தது.

மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியம், பொதுமாணவ பிரதிநிதி ,கலைப்பீடாதிபதிக்கோ எதுவித முன்னறிப்பும் செய்யப்படவில்லை என பல்கலைக்கழக உள்ளக வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

ஏற்கனவே இசைத்துறை தலைவராக இருந்த தர்சானந் தொடர்பாக ஊடகங்களில் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் அவர் மீது விசாரணை மேற்கொண்டு அதில் இருந்து குற்றமற்றவர் என தீர்மானித்து விடுவித்திருந்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இன்று ஆர்பாட்டம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் மீளவும் துணைவேந்தரினால் இசைத்துறை தலைவருக்கான மீள் நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை கலைப்பீடாதிபதி சிவநாதன் கிழித்தெறிந்ததாக தெரிவித்தனர்.

மேலும் எமது இசைத்தறை தலைவரின் காலத்தில் தான் தங்கள் துறை வளர்ச்சி கண்டது, இதனை சகிக்க முடியாத சில விரிவுரையாளர்கள் தவறாக மாணவர்களை வழிநடத்தி இசைத்துறையின் வளர்ச்சியை குழப்ப முயல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்,கலைப் பீடாதிபதியை தொடர்பு கொண்டபோது பலனளிக்கவில்லை.

ஆனால் இராமநாதன் நுண்கலை கழக பொது மாணவப் பிரதிநிதி விதுசன் கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக எனக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும் இவ்வார்ப்பாட்டம் முன்னாள் இசைத்துறை தலைவருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் இசைத்தறை தலைவர் தனது மாணவிகளுடன் எவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அவர் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை மீள நடத்தப்படல் வேண்டும் என்றார்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரை மணித்தியாலம் வரை சுலோகங்களை தாங்கி கோஷங்களை எழுப்பி தாங்கிச் சென்றனர்.

(பாறூக் சிகான்).
































1 comments :

Anonymous ,  May 30, 2013 at 11:48 AM  

Once the domestic inquiry was over and the accusations were not proved
the particulat person is to be reinstated,this is the administrative procedure of the country.Mr Sivanathan may be the head of the arts faculty,but we do believe that he has lack of administrative knowledge.Legal action against his act may bring a good solution to this matter.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com