Tuesday, May 14, 2013

அனுமதி தாருங்கள், தேரரே அனுமதி தாருங்கள்!! - ஞானஸாரரின் சபதத்தை ஏற்கத் தயார் என்கிறார் விமல்!

நோர்வேயிலிருந்து பணம் சேகரித்தமை பற்றி உறுதிப்படுத்தச் சொல்ல வேண்டியது எனக்கல்ல, சொல்ல வேண்டியது டிலந்தவுக்கும் நோர்வே தூதுவராலயத்திற்குமே...

பொது பல சேனா இயக்கத்தின் மூலம் நோர்வேயிலிருந்து பணம் சேகரித்தமை பற்றி உறுதிப்படுத்துமாறு சொல்ல வேண்டியது எனக்கல்ல,அந்த இயக்கத்தின் கட்டளையிடும் அதிகாரி திலந்த விதானகே மற்றும் இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதுவராலயத்திற்கே. என விமல் வீரவன்ச தெளிவுறுத்துகிறார். டிலன்த விதானகே ஏஷியன் ட்ரிப்யூன் இணையத்தளத்தில் கூறியதையும், இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையையுமே தான் மக்கள் மத்தியில் வைத்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச எடுத்துக்காட்டுகிறார்.

நேற்று (13) மாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக, தேசிய ஐக்கிய முன்னணி மூலம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 'பிரவினைவாத' அதிகாரங்கள் கூடிய வடக்குத் தேர்தல் எமக்கு வேண்டாம்' எனும் கருப்பொருளில் 10000 துண்டுப் பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய விமல் வீரவன்ச,

‘‘கௌரவத்திற்கும், பணிதலுக்கும், மரியாதைக்குமுரிய தேரர்களை நாங்கள் தலைவணங்குகின்றோம். இன்று அவர்களும் எங்களுடன் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து அரசியல் களத்தில் குதித்துள்ளார்கள். அதனால், எந்தவொரு பௌத்த பிக்குவும் விடுக்கின்ற சவால்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அவ்வாறான கலாச்சாரம் என்னிடம் இல்லை.

என்றாலும் அந்த தேரர் குறிப்பிடுவது போல, நான் அப்படியான ஒருவிடயத்தை நானாகச் சொல்லவில்லை. அதனைச் சொன்ன டிலன்த விதானகே அவ்விணையத்தளத்தில் அவர் பேட்டியின்போது குறிப்பிட்டிருக்கின்றார். 'நோர்வே நாட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு உண்ண, பருக, உறங்க, உல்லாசமாய் இருக்க இடம் தந்தார்கள்' என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை நோர்வே தூதுவராலயம் வெளியிட்டது. நோர்வே தூதுவராலயம் இதுபற்றி வெளியிட்ட அறிவித்தல் ஒன்று உள்ளது. அதில் கல்விக்கான நன்கொடை வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்கொடை என்பது பௌதீக ரீதியாகக் கொடுக்கப்பட்டாலும், தாள்களாகக் கொடுக்கப்பட்டாலும் அதற்கென்று பணப்பெறுமதி உள்ளது.

அதனால் இதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். இது நான் சொன்னதல்ல. எனக்குச் சவால் விடுத்துப் புண்ணியமில்லை. டிலன்த விதானகேவுக்கும், நோர்வே தூதுவராலயத்திற்கும்தான் இந்த சவாலை விட வேண்டும். இது நானாகத் தேடிச் சொன்னது அல்ல. அவர்களின் கூற்றுக்களிலிருந்து வெளிவந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு விமல் வீரவன்ச பதிலளித்தார்.

கேள்வி:- பொது பல சேனா இயக்கத்தின் சக்தியை நிர்மூலமாக்குவதற்காக உங்களால் மூன்று அமைப்புக்கள் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதே...?

பதில்:- எனக்கு இன்னும் வேலைகள் இருக்கின்றன....

கேள்வி:- இந்தியாவிலுள்ள சிவசேனா அரசியல் கட்சியுடனும், இலங்கையில் மந்திர தந்திரங்கள் செய்யும் ஒரு பெளத்த பிக்குவுடனும் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாக பொது பல சேன இயக்கம் குறிப்பிட்டது...

பதில்:- இவ்விடயத் தொடர்பில் நான் ஆச்சரியப்படுகிறேன். சிவசேனா அரசியல் கட்சிபற்றி நான் பத்திரிகை வாயிலாக மட்டுமே இதுவரை தெரிந்துவந்துள்ளேன். எனக்குத் தெரியாது மந்திர தந்திர சாதுக்கள் இருக்கிறார்களா என்று? இது சோடிக்கப்பட்ட பொய். ஒரு பௌத்த பிக்கு நின்றுகொண்டு இவ்வாறாக அவர்கள் சொல்லக் கூடாது என்பதே எனது மனப்பதிவு.

(கேஎப்)

No comments:

Post a Comment