Sunday, May 26, 2013

பாவனைக்கு உதவாத கையடக்கத் தொலைபேசிகளின் பற்றரிகள் 600 கனஅடி நிலப்பரப்பரப்பை அழிக்கவல்லவை.

இலத்திரனியல் கழிவுகளால் சூழல் மாசடைவதனை தவிர்க்கும் வகையில் பழைய கையடக்கத் தொலை பேசிகளை சேகரிக்கும் வேலைதிட்டத்தை துரிதப்படுத்த சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கதக்க வளங் கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் தனியார் கம்பனிகளை இத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஊக்குவிப்பதுடன் விசேட ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

கையடக்கத் தொலைபேசிகளில் உபயோகிக்கப்படும் மின்கலங்கள் (பற்றரிகள்) சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, அவற்றுள் அடங்கியுள்ள இரசாயன பதார்த்தம் அவை வீசப்பட்டிருக்கும் இடத்தின் 600 கனஅடி வரையிலான நிலப்பரப்பிலுள்ள இயற்கைத் தன்மையை அழிக்கவல்லவை. இதனால் குறித்த அப்பகுதி நச்சுத்தன்மையுடையதாகிறது. இதனால் அந்நிலத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்தும் வரைக்கூடிய தாவரங்கள் நச்சுத்தன்மையைக் கொண்டவையாகின்றன. வெற்றை உண்ணுவதால் மனிதனுக்கும் இந்த நச்சுத்தன்மை கடத்தப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலேயே இத்திட்டத்தை இலங்கையிலும் கடைபிடிக்க தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.

கணனி, கையடக்கத் தொலைபேசி மற்றும் வைத்தியசாலையில் உபயோகிக்கப்படும் வாசிப்பு மானிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பகுதிகளினாலேயே சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை ஏற்கனவே இது தொடர்பில் சில விழிப்புணர்வூட்டல்களை செய்ததன் மூலம் சில நிறுவனங்கள் பழைய கணனிகளின் பகுதிகளை சேகரித்து வருகின்றன.

இவ்வாறு வழங்குவதனால் புதிய கணனிக்கு விசேட கழிவு வழங்கப்படுவதனால் மக்கள் பழையனவற்றை திருப்பி வழங்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதேபோன்றே உபயோகிக்காத பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக்கும் திட்டமும் விசேட கழிவுமுறை அடிப்படையில் அமுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment