Friday, April 26, 2013

தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது!

குடித்துவிட்டு பணம் தர மறுத்த கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவியை பொலிஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட மோகன் என்ற நபர் கடந்த 2ம் திகதி ஸ்ரீபெரும்புதூர் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரைப் பற்றிய தகவல் தெரியாத நிலையில் அடையாளம் தெரியாத பிணம் என முடிவு செய்து பொலிஸார் போஸ்டர் ஒட்டினர்.

சில நாட்களுக்கு முன்பு மோகனின் மனைவி அம்சாவின் உறவினர் ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக சென்றிருந்தபோது அங்கு ஒட்டப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிணங்களின் போட்டோவில் மோகன் படம் இருந்ததை பார்த்து அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். மனைவி அம்சாவிடம் விசாரித்த போது தனக்கு ஏதும் தெரியாது. ஸ்ரீபெரும்புதூருக்கே வந்தது இல்லை என தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து மோகனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் ஏப்ரல் 1ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வேறு எண்ணிற்கு பேசியது தெரிந்தது. இதனையடுத்து அம்சாவிடம் பொலிஸ் பாணியில் விசாரித்து உண்மையை வரவழைத்தனர்.

இதனையடுத்து அம்சா பொலிஸாரிடம் தெரிவிக்கையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நாங்கள் இருவரும் மொத்த கீரை வியாபாரம் செய்து வந்தோம். கிடைத்த வருமானம் முழுவதையும் கணவர் மோகன் குடித்தும் கூத்தடித்தும் செலவழித்தார். இதனால் அடிக்கடி சண்டை வரும். அப்போது அசிங்கமாக திட்டுவார் இதையடுத்தே கொலை செய்ய முடிவு செய்தேன்.

கடந்த மாதம் 1-ந் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லலாம் என கணவரை அழைத்துச் சென்றேன். பஸ் நிலையம் பின்புறம் உள்ள மறைவான இடத்தில் அமர்ந்து மதுவை ஊற்றிக் அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். கீரை கட்டை அறுக்கும் சிறிய கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com