Friday, January 11, 2013

இந்தியாவில் புலிகளுக்கு தடை நீடிப்பு உறுதி: தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியீடு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடை நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. கடைசியாக 14-5-2012-ல் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

இந்தத் தடை நீட்டிப்பு சரியானதா இல்லையா என்பது குறித்து நீதிபதி வி.கே. ஜெயின் தலைமையிலான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

இந்தத் தீர்ப்பாயத்தின் விசாரணை சென்னை, ஊட்டி, டில்லி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு எதிரான தீர்ப்பாயத்தில் வாதிட்டனர்.

இந்தநிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையை நீதிபதி எம்.கே. ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்த உத்தரவு தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment