Monday, January 21, 2013

'ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அவமானம்' : மேனகா காந்தி கருத்துக்களால் சர்ச்சை!!

ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டினால் தமிழகத்திற்கு அவமானம் தான் ஏற்படுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.சென்னையில் நாய்கள் கண்காட்சியை தொடக்கி வைத்த பின்னர் அங்கு நிருபர்களை சந்திக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் தமிழகத்தின் மூன்று இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில் மேனகா காந்தி கருத்து தெரிவிக்கையில் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான காளைகளும், இளைஞர்களும் காயமடைகின்றனர். காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் கலாச்சாரம் என்று கூறி அரசியல்வாதிகள் இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். மகர சங்கராந்தி பண்டிகைக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். எனினும் அதை வைத்து அரசியல் செய்கின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமையல்ல. அவமனாம் தான். அப்போட்டிகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். இந்திய நாய்கள் குறித்த கண்காட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்பட வேண்டும். ஆங்கிலேயவர் வருவதற்கு முன்பு இந்தியாவில் 28 வகையான நாட்டு நாய்கள் இருந்தன. அவை தனித்தனி பண்புகளையும் கொண்டிருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் நம் நாய்களை விரட்டி அடித்துவிட்டு, அவர்கள் நாட்டின் நாய்களை இறக்குமதி செய்ய தொடங்கினர். அவற்றின் விளைவாக ஒரு சில நாட்டு நாய்களின் வகைகள் அழிந்துவிட்டன. எனவே நம் மக்கள் நமது நாட்டு நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்றார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது இருக்கும் ஒரு வகை நாய்கள் இந்தியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியேறும் போது கொண்டு சென்றவை தான் என சமீபத்தில் ஆராய்ச்சி தகவல்கள் சில வெளிவந்திருந்தன.

கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பில் இதே போன்று சர்ச்சை எழுந்ததுடன், விலங்குவதைப்புக்கு எதிரான அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். எனினும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சில நிபந்தனைகளுடன் அப்போட்டிகளை தொடந்ர்ந்து நடந்த்த முடியும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்து இப்பிரச்சினையை முடித்துவைத்திருந்தது. இந்நிலையில் மேனகா காந்தியின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment