Thursday, January 3, 2013

'இரத்த' நாடாக சிரியா !!!

கடந்த 21 மாதங்களாக நீடித்து வரும் சிரிய வன்முறையில், 2012 இல் மாத்திரம் 39 520 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மோதல் தொடங்கி 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை அரச படைகள் மற்றும் கிளர்ச்சிக்குழுக்களுக்கு இடையிலான இரு தரப்பு வன்முறையிலும் மொத்தம் 46 086 பேர் கொல்லப் பட்டிருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 2011 இல் 14% வீதமானோர் அதாவது 6 548 பேர் மட்டும் கொல்லப் பட்டிருந்தனர். தற்போது நடந்து வரும் இந்த வன்முறையின் உச்சக் கட்டமாக அலெப்போவில் உள்ள விமான நிலையம் மூடப் பட்டுள்ளது. பலி எண்ணிக்கையின் உச்சக் கட்டமாக நேற்று புதுவருட தினத்தில் கூட 136 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் வன்முறை தொடர்ந்தால் 2013 ஆம் ஆண்டு, இவ்விரு ஆண்டுகளை விட மோசமான உயிர் இழப்புக்கள் ஏற்படக்கூடும் என ஐ.நா மற்றும் அரபு சமூகத்தின் விசேட தூதுவர் லக்தர் பிராஹிமி கூறியுள்ளார். இவ் எண்ணிக்கை வெறும் 25 000 என கவனயீனமாகக் கணிக்க வேண்டாம் எனவும் அங்கு அதிகரித்து வரும் உயிரிழப்புக்கள் இவ்வரும் குறைந்தது 100 000 பேர் வரை கொல்லப் படலாம் என்றே காட்டுகின்றன எனும் அதிர்ச்சியான செய்தியையும் அவர் கூறினர்,

இந்நிலையில் பலவீனம் அடைந்து வரும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி 2013 இல் வீழ்ச்சியடையும் எனவும் கிளர்ச்சிப் படையினர் தமது உரிமைகளை மீளப் பெறுவர் எனவும், அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்து வரும் இலட்சக் கணக்கான சிரிய அகதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

1 comment: