Saturday, January 19, 2013

சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கோரிக்கை

சிரியாவில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்றுவரும் உள்நாட்டு சண்டை குறித்து 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு விசாரிக்கும். இதுவரை 60000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அகதிகளின் எண்ணிக்கையும் 11 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. போர்க்குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். இவ்வாறு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிரியாவில் அதிபர் படைக்கும் போராளிகள் படைக்குமிடையே உள்நாட்டுப்போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த போரில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.

எனவே சண்டையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ஐநா. பாதுகாப்பு சபையை கேட்டுக்கொண்டுள்ளேன்.

அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு ஐ.நா. சபையால் எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ளது. சிரியா பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இல்லை. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபை இதுகுறித்து பன்னாட்டு நீதிமன்றத்தில் விவரங்கள் அளிக்கும்.

சிரியாவிற்கு பொருளாதார தடை ஏற்படுத்தவும், போர்க்குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் பெற்ற ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment