Tuesday, January 8, 2013

நானும் சித்தார்தனும் தமிழ் அரசுக் கட்சியினரை பல்லக்கில் வைத்து சுமக்கின்றோம். சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கினாலும் தாம் தமிழரசுக் கட்சியினரை பல்லக்கில் வைத்து சுமப்பவர்களாகவே இருப்பதாக ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கடந்த 29.12.2012 அன்று இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்.. தமிழ்மக்களின் இன்றைய நிலை முன்பு என்றும் இல்லாதவாறு மிக மோசமாகி இருப்பதோடு நிலைமை நாளுக்குநாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சாதிகார போக்கும், சுயநல நோக்கமும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த பொதுச்சபை கூட்டத்தில் உங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதே. எத்தனையோ அவமானங்களை எதிர்நோக்கிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறாக செயற்படும் நோக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இல்லை. தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைமையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தொடர்ந்து தேவைக்கேற்றவாறு ஆதரவு வழங்கும்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக்கட்சி தலைவர்களை பல்லக்கில் வைத்து பல்லக்கை சுமப்பவர்களாகத்தான் இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகியவற்றின் தலைமை செயற்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளதுடன் அதற்கு சான்றாக தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு 01-12-2011 அனுப்பியிருந்த கடிதத்தையும் பகிர்ந்தளித்துள்ளார்.

கடிதத்தின் முழுமை வருமாறு.

அன்புள்ள சாம்,

உங்களுக்குப் பிடிக்காது போனாலும் மிகப் பொறுப்புணர்வோடு இக்கடிதத்தை எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும். இந்நாட்டு தமிழ்மக்கள் குறிப்பாக வடகிழக்கில் வாழ்பவர்கள் எதிர்நோக்கும் இருண்ட எதிர்காலம், நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலைமை, பிரச்சனைகள் விரிவாக அதிகரித்துவரும் இவ்வேளையில் ரோமாபுரி தீப்பற்றி எரியும் போது ரோம் சாம்ராச்சியத்தின் மன்னன் நீரோ வீணை வாசித்துக் கொண்டிருந்தது போல் நானும் நீங்களும் இருக்க முடியாது. தற்போதைய நிலைமையை உணர்ந்து, செய்வது என்னவென்று அறியாது தவிக்கும் தமிழ்மக்களின் குரலுக்கு செவிமடுத்து விழிப்படையும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஏனைய தமிழ் தலைவர்களோடு ஒப்பிடும் போது நானும் நீங்களும் அரசியலில் மிக முதிர்ந்தவர்கள் என்பதால் தமிழ் மக்களுக்கு முறையான தலைமையை வழங்க வேண்டிய கடமை எங்களுக்குண்டு. இதற்காக நான் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றேன்.

நான் ஐம்பது(50) ஆண்டுகளுக்குமேல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். நான் முதன்முதலில் போட்டியிட்ட தேர்தல் 1959 டிசம்பர் மாதம் கொழும்பு மாநகரசபை தேர்தலாகும். ஆனால் அதற்கு முன்னதாகவே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். நான் எவருக்குப் பின்னாலும் பதவிக்காக இரந்து சென்றதில்லை. நான் வகித்த அத்தனை பதவிகளும் என்னுடைய சொந்த முயற்சியால் எனக்குக் கிடைத்தவையாகும். நானொரு சட்டத்தரணியும், நொத்தாரிசும் என்பது பலருக்குத் தெரியாது. 1970ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவுடன் எனது சட்டத்தரணி தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன். நான் அரசியலில் தூய்மையாக செயற்பட்டு கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மற்றும் எனது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சகபாடிகளாலும் நேசிக்கப்பட்டவன். தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதுகாக்க குறிப்பாக எமது சில தலைவர்களின் மறைவிற்குப் பின்னர் எவ்வாறு செயற்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எவருக்கும் பரிகாசத்துக்குரியவனாகவோ, முகஸ்துதி பாடுபவனாகவோ செயற்படவில்லை. இந்த நிமிடம்வரை கொள்கைவாதியாக வாழ்ந்தும், வாழ்ந்துகொண்டும் இருக்கின்றேன். இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். எனது இக்கூற்றை உறுதிப்படுத்த என்னுடன் அரசியலில் ஒன்றாக செயற்பட்டவர்களில் நீங்கள் மட்டுமே தற்போது இருக்கின்றீர்கள்.

55 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்து உங்களுடனும் தற்போது இல்லாத சிரேஷ்ட தலைவர்களுடனும் இணைந்து பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியமையால் நீங்கள் தற்போது அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண பெருமளவு உதவியிருப்பேன். இந்த விடயத்தில் அனுபவம் உள்ளவர்களின் பங்களிப்பு மிகவும் உதவக்கூடியதே.

எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று நீங்களும் உங்களுடன் சேர்ந்து செயற்படுகின்றவர்களும் விடுத்த வேண்டுகோள் ஒருபுறமிருக்க பொதுமக்களிடமிருந்து எனக்கும் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்களுக்கும் மக்கள் பெரும் அழுத்தம் கொடுத்தனர். என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதில் சிரமம் இல்லை. ஏனெனில் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் நான் 36,000 வாக்குகளை பெற்று ஒன்பது பேரில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவன். நீங்கள் இந்தியாவிற்கு சத்திரசிகிச்சைக்காக சென்றிருந்தவேளை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நியமனம் கோரப்பட்டபோது நானும், புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்களும் உங்களுடைய காரியாலயத்துக்குச் சென்று நியமனம் பெறவுள்ள வேட்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக உறுதியளித்திருந்தோம். தமிழரசுக்கட்சி செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்துழைப்புக்கு அடையாளமாக சில வேட்பாளர்களின் பெயர்களையும் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு கொடுத்திருந்தோம். இதன் பின்பு உங்களை பார்ப்பதற்காக சென்னைக்கு விஜயம் செய்து மறுநாள் அங்கிருந்து திரும்பினேன். இந்த விஜயம் உங்களை பார்ப்பதற்கென தனித்துவமான விஜயமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து முடிந்தளவு பல பிரச்சார கூட்டங்களில் பங்குபற்றியிருந்தோம். எமது ஒத்துழைப்பு விசுவாசமானதென மக்கள் நம்பினர். கூட்டங்களில் பெரும் தொகையானவர்கள் கலந்து கொண்டதோடு வாக்களிப்பிலும் பெருமளவானோர் கலந்து கொண்டனர். அரசாங்கத்திற்கு சேர்ந்திருக்க வேண்டிய இரண்டு சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வென்று கொடுத்தோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய இரு கட்சிகளினதும் ஆதரவை பல துறையினரும் வரவேற்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவின் அழைப்பை பெற்றுக்கொண்டவேளை இந்த விடயத்திலேனும் என்னுடைய கருத்தையும், திரு. சித்தார்த்தன் அவர்களுடைய கருத்தையும் கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. நீங்கள் அங்கிருந்து திரும்பியதும் இன்றுவரை மூன்று வாரங்களாகியும் உங்கள் குழுவுக்கும், அமெரிக்க அல்லது கனடிய குழுவுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை கூறவேண்டுமென்று நீங்கள் அக்கறை கொள்ளவில்லை. உங்களின் அமெரிக்க விஜயம் தனிப்பட்டதாக இருந்திருப்பின் நான் அதை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஒரே கருத்தைக் கொண்ட தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்ற மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய வேண்டிய புனிதமான கடமை உங்களுக்குண்டு.

அரச தரப்பிடம் நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பது உங்கள் குழுவினருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். நான் அறிய விரும்புவது எதை யாருக்கு மறைக்கின்றீர்கள் என்பதே. உங்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தவர்களுக்கு நியாயமான விளக்கத்தைக் கொடுத்து உங்கள் செயற்பாட்டை நியாயப்படுத்தினால் அன்றி அதை இரகசியமாக வைத்திருப்பது நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பலனளிக்காது என்றே நான் கருதுகின்றேன். என்னை மக்கள் வாக்களிப்பு மூலம் நிராகரித்துவிட்டார்கள் என்பதால் இனப்பிரச்சனையில் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கூறத்தேவையில்லையென தெரிவித்தால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது நிலைப்பாடு என்னவெனில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற நியாயமான, சுதந்திரமான பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்த்pல் 36,000 இற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்ற ஒன்பது பேரில் நான் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டேன். 2004ம் ஆண்டு நான் எவ்வாறு தோல்வியுற்றேன் என்பதை ஏற்கனவே நான் சுருக்கமாக கூறியுள்ளேன். நீங்கள் விரும்பினாலொழிய அந்தத் தேர்தலில் நடந்தேறிய மிக கசப்பான சம்பவங்களை நினைவூட்ட விரும்பவில்லை. அவசியமேற்பட்டால் நான் அதை கூறவேண்டிவரும். நானும் திரு சித்தார்த்தனும் உங்களுடைய காரியாலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவோம் என கூறியதிலிருந்து உங்களைப் பற்றியோ, உங்கள் கட்சியின் நன்மை தீமைகள் பற்றியோ, எழுதுவதையும், கூறுவதையும் நிறுத்தி விட்டேன் என்பதற்கு ஒரேயொரு காரணம், நடந்து முடிந்ததை மறப்பதென்றும், உங்களுடனும், உங்கள் சகபாடிகளுடனும் எனக்குள்ள தப்பான அபிப்பிராயங்களை கணக்கில் எடுக்கமாட்டேன் எனவும் உறுதியளித்திருந்தேன். ஆனால் மற்றவர்கள் எவரிலும் எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடியே செயற்படுகின்றனர்.

உள்ளுரிலும், வெளியூர்களிலும் சகல சக்திகளும் ஒன்றிணைந்து என்னை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்ற கங்கணம்கட்டி நிற்கின்றார்கள் என்பது தெளிவாகிறது. சகல துறைகளிலும் உள்ள தமிழர்களின் ஆதரவை பெற்று என்னை ஓரங்கட்ட ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் ஏன் என்பதைத்தான் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனது நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன குற்றமிழைத்தேன்?. எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நான் தீங்கிழைக்காது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அரை நூற்றாண்டுக்கு மேல் சேவையாற்றி வந்துள்ளேன். தேர்தலில் எனக்கேற்பட்ட தோல்வியை நான் இல்லாத நீண்ட காலத்தின் பின் ஒரு தேசிய அனர்த்தமாக தமிழ் மக்கள் உணர்வார்கள் என்பதோடு அதற்குப் பொறுப்பானவர்களும் வருந்துவர். மிக விரைவில் ஒட்டுமொத்தமாக நாடே உணரும். அத்தோடு தமிழ் மக்கள் தாம் அநாதைகளாக விடப்பட்டதாக உணர்வார்கள் என உறுதியாக நம்புகின்றேன். எனது அறிவுரையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். சில தலைவர்களின் சுயநல போக்கு மக்கள் எனது அறிவுரையை ஏற்க அனுமதிக்கவில்லை. அதற்குப்பதிலாக மனிதனின் பொறுமை சக்திக்கப்பால் பெருமளவு அவதூறுகள், கீழ்த்தரமான முறையில் என்மீது அள்ளி வீசப்பட்டு ஒரு அரசியல்வாதியை அவமானப்படுத்த இந்த நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற 'துரோகி' என்ற கௌரவ பட்டம் எனக்கு வழங்கப்பட்டது. அரபாத் போன்று பிரபாகரனும் உலக வலம்வரும் நிலை உருவாகும் என்று நாடாளுமன்றத்தில் ஆனந்தசங்கரி உரை என்றும் பிரபாகரனை கைதுசெய்யக்கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் குறித்து கூட்டமைப்பு கவலையடைகிறது. – ஆனந்தசங்கரி தெரிவிப்பு என்றும் பிரபாகரனுக்கு எதிரான 200 வருட கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் என்ற பத்திரிகை செய்திகள் என்னுடைய அன்றைய நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியது. நான் பிரபாகரனை அழிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கவில்லை. அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை விரும்பிய நான் எப்படி துரோகியானேன்?. 55 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் ஏதாவது பதவி வேண்டி நின்றேனா? சலுகை கேட்டேனா? திருமதி சந்திரிகா அவர்கள் எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தந்தபோது அதை ஏற்றேனா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆளுநர் பதவி தந்தவேளை அதனை ஏற்றேனா? 1970ம் ஆண்டு தொடக்கம் 18 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த காலத்தில் ஒரு காணித்துண்டாவது அரசிடமிருந்து பெற்றேனா? எனக்குத் துரோகி பட்டம் தந்தவர் யார்? ஏன்?

உங்கள் அபிப்பிராயப்படி அல்லது உங்களுடன் இணைந்து செயற்படும் உங்கள் கட்சிக்காரர்களின் அபிப்பிராயப்படி அல்லது உங்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுர், வெளியூர் புத்திஜீவிகள் அல்லது புலம் பெயர்ந்தவர்கள் அபிப்பி;ராயப்படி எல்லோரும் தமிழ் சமூகத்திற்கு தொண்டாற்ற ஒரு தகுதியற்ற நபரென என்னை கருதினால் தயவுசெய்து அதை தயங்காமல் கூறினீர்களேயானால் எனது பணியை தொடர புது வழியை கண்டுபிடித்திருப்பேன். நீங்களோ அல்லது உங்கள் கட்சியை சேர்ந்த வேறெவரேனும் அரசியலில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல அனுபவங்களை பெற்ற நானும முப்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு திம்பு பேச்சுவார்த்தைகள் போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட திரு. சித்தார்த்தன் அவர்களும் உங்களுடன் இணைந்து செயற்படுவதை பொருத்தமற்றதென கருதினால் தயவுசெய்து கூறுங்கள். நாம் எவரினதும் முதுகில் ஏறி சவாரி செய்வதோ அல்லது எம்மீது எவரும் சவாரி செய்வதையோ அனுமதிக்கப் போவதில்லை. நன்றியுடன் இக்கடிதத்தை பூர்த்தி செய்கின்றேன்.

தமிழ் கட்சிகளின் கூட்டில் எமது பங்களிப்பு என்னவென்று பார்ப்போம்

2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி அதாவது இக்கடிதம் எழுதுவதற்கு பத்தரை (10 ½) மாதங்களுக்கு முன்பு வலம்புரி, தினக்குரல் ஆகிய இரு தினசரிகளும் முறையே பின்வரும் தலையங்கங்களாக செய்திகளை வெளியிட்டன.

' அரசுக்கு அழுத்தம் கொடுக்க சகல தமிழ் கட்சிகளும் ஓர் அணியின் கீழ் அணிதிரள வேண்டும்' – வீ. ஆனந்தசங்கரி என்றும், விடுதலைப் புலிகள் சம்பந்தமாக

' தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுவது தமிழ் மக்களுக்கு நன்மையாக அமையாது'- வீ. ஆனந்தசங்கரி என்பதோடு இது சம்பந்தமாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. சுவிஸ் நகரில் பல்வேறு இலங்கை தமிழ் கட்சிகள் இணைந்து நடத்திய மாநாட்டு செய்தியை 25-11-2009 அன்றைய தினக்குரல் பத்திரிகை
'தமிழ் பேசும் மக்கள்' என்ற ஒரே குடையின் கீழ் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.- என்ற செய்தியை பிரசுரித்திருந்தது. சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பின்வரும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர். வீ. ஆனந்தசங்கரி - தமிழர் விடுதலைக் கூட்டணி, பெரியசாமி சந்திரசேகரன்- மலையக மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ரவூப் ஹக்கீம்- ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், முகமட் ஹிஸ்புல்லா- அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், மனோ கணேசன்- ஜனநாயக மக்கள் முன்னணி, சிவசுப்ரமணியம் நந்தகுமார்- ஈரோஸ், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுரேஸ் பிரேமச்சந்திரன்- ஈபி.ஆர்.எல்.எப், ஆர். சம்பந்தன்- த.தே.கூ, மாவை சேனாதிராசா- தமிழரசுக்கட்சி, தர்மலிங்கம் சித்தார்த்தன்- புளொட், திருநாவுக்கரசு ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப், ஆறுமுகன் தொண்டமான் - இ.தொ.கா .இது நடைபெற்று மூன்று ஆண்டுகளும் 34 நாட்களும் கடந்துவிட்டன. நடந்தவற்றை ஒரு பொதுமகன் சீர்தூக்கி பார்ப்பாரேயானால் தமிழ் தலைவர்களை பற்றி என்ன நினைப்பர். இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தாம் அடைந்த வெற்றியை 'அரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என திரு சம்பந்தனின் கோரிக்கை வெளியானது.

பொதுவாக இத் தேர்தல் சம்பந்தமான எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பாத போதும், வடகிழக்கில் நடந்தேறிய தேர்தல் சம்பந்தமான எனது சில கணிப்புக்களை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் சம்பந்தமாக தமிழரசுக்கட்சி தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவருமான திரு இரா. சம்பந்தன் அரசும் சர்வதேச சமூகமும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றும் தவறின் தமிழ் மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாக கணிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார். இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மட்டத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் வெளிவருவது வழக்கம். அரசும் சர்வதேச சமூகமும் தமது தேர்தலை அங்கீகரிக்கமாட்டார்கள் என்ற பயம் திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? இலங்கை தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65,119 மட்டுமே. இது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 9 வீதம் ஆகும். திரு சம்பந்தனுடைய கட்சி 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் 90 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்தாலும் அத் தேர்தலில் அவரின் தமிழரசுக்கட்சி முற்றுமுழுதாக தனது 'நாணயத்தை' இழந்து விட்டது. ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் உட்பட வருகை தந்திருந்த பல்வேறு தேர்தல் கண்காணிப்புக்குழுக்களின் அறிக்கைகளை படித்துப் பார்க்கின்றவர்களுக்கு எவ்வளவு மோசடிகள் ஆள்மாறாட்டங்கள் தேர்தல் சட்ட மீறல்கள் எந்தளவிற்கு நடந்தேறியுள்ளன என்பது புலனாகும். பவ்ரல் மற்றும் சி.எம்.இ.வி ஆகிய உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இரண்டும் இணைந்து வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல் இரத்துச் செய்யப்பட வேண்டுமெனவும், அப்பகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் விடப்பட்ட கோரிக்கையை தேர்தல் சட்டத்தில் இடமின்மையால் தேர்தல் ஆணையாளரால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழரை பெரும்பான்மையாகக் கொண்ட 23 ஆசனங்களில் 22 ஆசனங்களை கைப்பற்றியது. மேலும் மிகப்பிரபல்யமான தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டு மாசி மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கலைக்கப்பட்;டிருக்க வேண்டும். அதைவிடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவராக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் அதே பெயரில் தமிழ் தேசிய சுட்டமைப்பை மீண்டும் பயன்படுத்தி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 2 ஆசனங்களையும் ரெலோவிற்கு 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் தலா ஒரு இடத்தையும் கொடுத்து 06 இடங்களை தமக்கு எடுத்துக் கொண்டனர். இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்மைப்பின் பெயரை மக்களுக்கு காட்டி 22 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி ஆறு ஆண்டு காலங்கள் பாராளுமன்ற ஆசனத்தில் வீற்றிருந்தனர். அத் தேர்தலில் வென்றவர்கள் பின்தள்ளப்பட்டு தோல்வியுற்றவர்கள் வென்ற புதினம் இத்தேர்தலில்தான் நடந்தேறின. 1983ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் காலஎல்லை நீடிக்கப்பட்டபோது 18 உறுப்பினர்கள் தம் பதவிகளை இராஜினாமா செய்து மக்களின் ஜனநாயக உரிமைக்கு மெருகூட்டி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புகழை தேடித்தந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புகழைத் தேடித் தந்தவர்களில் திரு. சம்பந்தன் அவர்களும் நானும் அடங்குவோம். இந்தப் பாரம்பரியத்தை திரு. இரா.சம்பந்தன் ஏன் கடைபிடிக்கவில்லை. தந்தை செல்வாவின் நாமத்தைகூட உச்சரிக்கும் தகுதி தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கோ செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களுக்கோ இல்லை.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு 2010ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகவே தொடர்ந்து செயற்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரையும், ரெலோ இயக்கத்தினர் இருவரையும் மற்றும் வன்னி, மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சிலரையும் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்த பின்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்காது கடந்த தேர்தல் வரையும் அதே பெயரில் செயற்பட்டனர். தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இயங்குகின்ற இலங்கை தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இதுவே காரணம். தமிழ் மக்களை தொடர்ந்தும் தவறாக வழிநடத்தாது இலங்கை தமிழரசுக் கட்சியினர் மிகக் கண்ணியமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பென அழைப்பதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான வரலாறு அப்பாவி தமிழ் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ, அப்பாவித்தனமாகவோ, சில புத்திஜீவிகள,; அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைகழக மாணவர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் போன்றோரால் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென நம்பவைத்து தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். உண்மையில் இந்த தேசிய கூட்டமைப்பானது 2001ம் ஆண்டு எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை அநேகர் மறந்து விட்டனர். இப்போது 'உண்மை' வெளிப்பட்டு விட்டது.06 ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமது கடமைகளை செய்யாதபடியினால் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டவென காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வேண்டிய கடமைகளை செய்ய தலைமையின் அனுசரணையின்மையால் பல்லாயிரக்கணக்கான உறவினர்களையும், பலகோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழக்கநேர்ந்தது என்பதை உணர்கின்றனர். செல்வாக்குமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழி காட்டியவர்களே இப் பேரழிவுகளுக்கும், சொத்துக்களின்; இழப்புக்களுக்கும் பொறுப்பாளியாவர்கள். இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்டஈட்டை பெற்றுத்தருவதில் தவறிவிட்டனர். அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தக் கூடாதெனவும் அவர்களை விடுவிக்கும்படியும் சர்வதேசமே வேண்டிநின்ற போதும் அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அவர்கள் மீது மிக மிக அக்கறை காட்டவேண்டிய இவர்கள் மௌனம் சாதித்தனர். அன்று பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு புது உறுப்பினர்தான் அதை செய்ததாக உண்மைக்குப் புறம்பான ஒரு புதுக்கதை கூறுகிறார். இந்தப்பாவத்தில் எனக்கு பங்கில்லை. புலிகளையும், அரசையும் ஒரு பொது அமைப்பை வைத்து மக்களை விடுவிக்கும்படியும் கேட்டிருந்தேன். மனித கேடயமாக பாவிக்கப்படும் மக்களை விடுவிக்காவிட்டால் மூன்று இலட்சம் மக்களின் சாபத்துக்கு ஆளாவீர்கள் என தம்பி பிரபாகரனுக்கும், இம்மக்களை காப்பாற்றுங்கள் அன்றேல் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும், இனியேதும் ஒரு அப்பாவி உயிர் தன்னும் பறிக்கப்படக்கூடாதென ஜனாதிபதியையும் கேட்டிருந்தேன். இந்த ஆறு ஆண்டுகள் வன்னியில் இடம்பெற்ற அத்தனை மரணங்கள், யுத்தத்துக்கு ஆட்சேர்த்தல், பிள்ளைகளை பறிகொடுத்த அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற அனைத்துக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும். திரு சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி தலைவராகவோ, அன்றேல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தும் வடகிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்துவிட்டார். கடைசி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும்படி தவறாக வழிகாட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? திரு சம்பந்தன் அவர்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை சில ஆசனங்களை வெற்றிபெற வைத்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியால் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 65119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை. திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதுபோல் தாம் சரத்பொன்சேகாவிற்கு பெற்றுக்கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரச்சாரம் செய்தவர்கள் நடந்துகொண்ட முறையே. புத்திஜீவிகள் எனவும் பல்கலைகழக மாணவர்கள் எனவும், சுதந்திர ஊடகவியலாளர்கள் எனவும் கூறிக்கொண்டவர்கள் சில ஊடகவியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்துவிட்டனர். காயமுற்ற விடுதலைப் புலிகள் போராளிகளின் மரணங்கள், இறுதிக்கட்டப் போரின் போதும் சிறுவர்களைப் போராளிகளாக பலவந்தமாக சேர்க்கப்பட்டமையும் முற்றுமுழுதாக மக்களுக்கு மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இவ்விடயங்கள் கொண்டுவரப்பட்ட போதும் யுத்தக்காலத்தில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்கமுடியாததென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீர்இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகிறது.

இனப்பிரச்சனை தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும், முன்வைத்ததும் நானே. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிக முக்கியமான இரு வேட்பாளர்களிடம், தேர்தல் பிரச்சாரத்தின்போது இனப்பிரச்சனையை முன்வைக்காது தேர்தல் முடிந்தபின்னர் எல்லா வேட்பாளர்களும் இணைந்து இனப்பிரச்சனை தீர்விற்கு முடிவெடுக்கலாமென ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதான இந்திய அரசியல் முறைமையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக இருந்தபோதும், ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இதுபற்றி பேசியுள்ளேன். அதுமட்டுமன்றி பல மட்டங்களிலும் உள்ள பலருடனும் இதுபற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி, அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சமயப்பெரியார்கள், வணக்கத்துக்குரிய ஆண்டகைகள், மகாநாயக்கர்கள், பல்வேறு இனப்பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோசனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசின் முறைமையை நான் முன்வைத்தமைக்கு முதலாவது காரணம் 'சமஷ்டி' 'ஒற்றையாட்சி' போன்ற சொற்பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும். இரண்டாவதாக பாக்கு நீரிணைக்கப்பால் உள்ள எட்டு கோடி தமிழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.

பெரும்பான்மை இந்துக்களை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடுகள் இருந்தபோதும் மிகவும் மதிக்கப்படுகின்ற ஓர் இஸ்லாமியர் ஜனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கிய மக்கள் இரண்டு வீதமாக இருந்தும், சீக்கியர்களில் சிலர் காலிஸ்தான் நாட்டுப்பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒர் சீக்கியராவார். தவிரவும் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் எமது மதங்களான பௌத்தமும், இந்துமதமும் எமது கலாச்சாரம், பண்பாடு அத்தனையும் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப்பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்னுமொரு முக்கியமான விடயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினைக்கோரிய தமிழ்நாட்டில் அக்கோஷம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினைப்பற்றி பேசுவதை ஒட்டுமொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக்கட்சி மட்டும் பொறுப்பேற்று விடுதலைப்புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இணங்கவோ வைத்திருந்தால் அந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன்னான வாய்ப்புக்கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் விடுதலைப்புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டபின் இந்திய அமைப்புமுறை பற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள். அதுவும்கூட அரைமனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனது ஆலோசனையை ஏற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்;த்திருக்கலாம். இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இந்த ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு எனது ஆதரவும் உண்டென்றோ பத்திரிகையோ அல்லது திரு.சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அது உண்மையா?.

திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபரீதப்போக்கே தமிழ்மக்கள் இந்நிலைமைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது. இதுசம்பந்தமாக ஜனாதிபதி அவர்கள் எவ்வித கருத்தும் கூறியதாக நான் அறியவில்லை. அவ்வாறுதான் ஜனாதிபதி அவர்கள் கூறியிருந்தாலும்கூட ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் அவரை கேட்டுக்கொண்டதன் நிமித்தமாகவே இருந்திருக்கும். திரு. சம்பந்தன் அவர்களின் சுயநலப்போக்கிற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் திரு. சம்பந்தன் மூலமாகவோ வேறெவர் மூலமாகவோ சிறுபான்மையினருக்கு ஏற்புடைய ஒரு தீர்வை காண்பதே பிரதானமானது. புத்திஜீவிகள், சுதந்திர எழுத்தாளர்கள், பல்கலைகழக மாணவர்கள், அச்சு ஊடகவியலாளர்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளார்களா? அப்படியிருப்பின் அதற்குரிய காரணமென்ன? நடைபெறும் எதற்கும் தனக்கே புகழ் கிட்டவேண்டுமென திரு.சம்பந்தன் அவர்களும், பத்திரிகைகள் ஏதேனும், தாம் விரும்பும் எவருக்கேனும் புகழ்தேட வேண்டுமென எண்ணலாம். எனக்கு வேண்டியதெல்லாம் எமது மக்களின் பிரச்சனைக்கு ஓர் தீர்வும், துரோகியென எனக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டம் நீக்கப்பட்டு நிம்மதியாக இறக்க வேண்டுமென்பதே.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழியென கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ்பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வையடைதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தும். எவருக்கேனும் எம்மீது வெறுப்பு இருப்பின் எனது அரை நூற்றாண்டுகால அரசியலுடன் தமது குரோத மனப்பான்மையை கலக்கவிடக்கூடாது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25ம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியாகிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 'இந்நாட்டில் இன்றுள்ள மிக சிறியளவிலுள்ள ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவர். ஏனையோர் கொல்லப்பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு விடுதலைப் புலிகளால் மௌனிகளாக்கப்பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் மக்களை கொல்வதில்லை, எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை, எவரையும் கொலை செய்யவோ, வெறுப்படையவோ தூண்டுவதில்லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுததாரிகளாக ஆக்குவதில்லை. தம்மக்கள் மீது வரி வசூலிப்பதுமில்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஜனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும், கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்து திரியவே'. யாராவது பல்கலைகழக மாணவர்களை அல்லது புத்திஜீவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர்களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை, பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள்ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பலதடவைகள் படித்துப் பார்த்தேன். இவர்கள் தமது எழுத்துமூலமும், பேச்சுமூலமும், பிரச்சார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடகிழக்கே உள்ள தமிழ்மக்களை ஏன் ஈடுபடுத்தினார்கள்? கிளிநொச்சி தொகுதியில் முதன் முறையாக 1960ம் ஆண்டும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற, உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் அத்தனையிலும் போட்டியிட்டுள்ளேன். கிளிநொச்சி (கரைச்சி) கிராமசபையின் தலைவராக 1965ம் ஆண்டும் 1968இல் கிளிநொச்சி பட்டினசபையின் தலைவராகவும், கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக 1970;,1977 ஆம் ஆண்டும். தெரிவு செய்யப்பட்டேன். பாராளுமன்றத்தின் கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடிக்க அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து திரு சம்பந்தன் உட்பட பதினாறு பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம்.

'ஜனநாயக குரலுக்கு செவிசாயுங்கள்' என்ற தலைப்புடன் அப்பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'ஜனநாயகவாதியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி மீண்டும் ஓர் கடிதம் வரைந்துள்ளார். இத்தடவை தமிழ்நாடு முதலமைச்சர் கலாநிதி கலைஞர் மு.கருணாநிதி அவர்களை இலங்கையின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வை இலங்கை அமுல்படுத்த அவரின் ஆதரவை கோரியுள்ளார். கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்பிரச்சனைக்கு ஓர் தீர்வுக்கான முயற்சிக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் உதவ முயற்சிக்கின்றார்'.

இலங்கை சுதந்திரமடைந்து 2007ம் ஆண்டு மாசி 4ம் திகதி 59வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய விழாவில் ஜனாதிபதியாக தெரிவானதன் பின் இரண்டாவது தடவையாக அவ்விழாவில் கலந்துகொண்ட அவர் தனதுரையில் கூறியதாவது 'தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையோடு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புனிதமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். நான் மொரக்ஹாகந்த மகா சமுத்திர அங்குரார்ப்பண விழாவில் கூறியதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். அது என்னவெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்குவதே. அதற்கு தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் தயாராகவுள்ளனர். இரத்தவெறிபிடித்த புலிகளின் கோரிக்கைக்கிணங்க நாம் தயாராக இல்லை. ஆனால் நியாயமாகவும், நேர்மையாகவும் செயற்படுவதாக இருப்பின் குறைந்தபட்சம் திரு. ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் கோரிக்கைக்கு இணங்கியாக வேண்டும்.'. ரூபவாஹினியிலும் வேறு தொலைகாட்சிகளிலும் இவ்வுரை ஒளிபரப்பப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய எனது நிலைப்பாடு இந்திய முறையிலான ஆட்சி என்பதே. டக்ளஸ் அவர்களின் பிரேரணை வேறு நிலைப்பாடு என்னுடைய ஒத்ததல்ல.

மேலும் ஆசிரியர் தலையங்கத்தின் பகுதிகள் சுயவிளக்கமளிக்கின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி – தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தவேளையில் விடுதலைப்புலிகள்தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றுகூறி அவர்களின் முகவர்களாக செயற்பட்டனர். திருவாளர். இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் தம்பி பிரபாகரன் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு பலகோடி பெறுமதியான சொத்துக்களும், பொதுச் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ்மக்களைக் காப்பாற்ற தவறியனவே அன்றி நானல்ல. அப்படியானால் இந்த புத்திஜீவிகளும், அரசியல் ஆய்வாளர்களும், சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப்பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதே ஒரேவழியென, எந்த அடிப்படையில் மக்களை வழிநடத்தினர். கனடாவிலிருந்து செயற்படும் ஓர் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளருடைய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிப்பெயர்த்து தேர்தல் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 5ம் திகதி ஒரு தமிழ் தினசரி வெளியிட்டிருந்தது. அவர்கள் கொடுத்திருந்த தலையங்கம் 'வடகிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே ஒரேவழி' என ஆலோசனை வழங்கியிருந்தது. இத்தினசரி திட்டமிட்டு என்னை தோற்கடிக்கும் நோக்கத்தோடு இவ்வாறு பிரசுரித்ததாக நான் கூறவில்லை.ஆனால் இது எங்கேயோ ஓரிடத்தில் உருவெடுத்த பச்சை துரோகமாகும். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? நீதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்ட ஓர் அகிம்சைவாதி, தனிமனிதனை வேட்டையாட அந்நிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இம் முயற்சியின் பின்னணி யார்? அவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளமையால் இது விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும். கடந்த சில வருடங்களாக அடிக்கடி பல கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் நான் உட்பட மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர மற்றைய அனைவரும் மௌனம் சாதித்தனர். இத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து குறைந்தபட்சம் ஒரு சம்பவத்தையேனும் கண்டித்திருந்தால் பிரபாகரன் உட்பட பல ஆயிரக்கணக்கான உயிர்களையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும். எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்து, தமிழுக்கோ தமிழ்மக்களுக்கோ கடுகளவேனும் தீங்கு எண்ணாத என்னை அவர்களின் துரோகியாக அடையாளம் காட்டினர். தமிழர் விடுதலைக் கூட்டணியை தந்தை செல்வா ஆரம்பித்த காலம்தொட்டு இன்றுவரை அவரின் அகிம்சை அடிச்சுவட்டை பின்பற்றி வருகிறேன். உண்மையாகவும், விசுவாசமாகவும் உழைத்த எத்தனையோ இளைஞர்கள் அரச படையினரின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு பலியானார்கள். அவர்களின் தியாகம் இன்று கொச்சைப்படுத்தப்பட்டு வேலையற்றவர்களே ஆயுதம் தாங்கி போராடினார்கள் என்று வர்ணிக்கப்பட்டபோது அந்த நபரை ஒரு ஊடகமேனும் தட்டிக்கேட்காதது எந்தவகையில் நியாயமாகும்? எத்தனை அத்தகைய தலைவர்களை இழந்தோம். உதயசூரியன் கொடியை எமக்குதந்த தந்தை செல்வா அதேகொடியால் போர்த்தப்பட்டே தனது இறுதியாத்திரையை மேற்கொண்டார். தந்தையின் வரலாறும், அவரின் சாதனைகளும் இளைஞர்களின் தியாகங்களும் அன்னாரோடு விசுவாசமாக உழைத்த தலைவர்கள் ஆகியோரின் புனிதமான வீரவரலாறும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு முக்கிய நிகழ்வுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புதியதலைமுறையினருக்கு புதுக்கதை சொல்லிவருகிறது தமிழரசுக்கட்சி. இன்று சிலரால் புத்துயிர்கொடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி பழைய மிகமுக்கியமான வரலாற்றை மூடிமறைக்கிறது. தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக்கட்சி அவராலேயே செயலிழக்கப்பட்டிருந்தும் அக்கட்சிக்கு புத்துயிர் அளித்தமை தந்தை செல்வாவுக்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானமாகும்.

குடத்தனை என்ற ஊரில் மண் அள்ளச்சென்ற ஒரு பல்கலைகழக மாணவன் உழவு இயந்திரத்துடன் தீயிட்டு கொலைசெய்யப்பட்டான் அப்போது அதனை ஆட்சேபித்தவன் நானே. பல்கலைகழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவண் கூல் இன் நியமனம் ஆட்சேபிக்கப்பட்டபோது அதனை எதிர்த்தவன் நானே. இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் நான் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய முறையிலான ஒரு தீர்விற்கு இலங்கை அரசுக்கு வழங்கிய ஆலோசனைக்கு பெரும் வரவேற்பு உண்டென குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன் முடிவுரையில் குறிப்பிடுவதாவது 'தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, இந்திய அரசியல்வாதிக்கு பெரும் பொறுப்புணர்வோடு எழுதியுள்ளாரென நாம் கருதுகின்றோம். ஏனெனில், அந்த ஜனநாயக தலைவருக்கு தென்னிலங்கையிலுள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளுடனும் நெருங்கிய உறவுண்டு.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் என்மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார் போல் தோன்றுகின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டிருந்தபோதும் எனது கடமையை எனது நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செய்துள்ளேன். என்மீது அதிகம் நட்பு பாராட்டாத இன்னுமொரு தமிழ் தினசரி 2009ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி தனது தலையங்கத்தில் என்னைப் பாராட்டி உள்ளது. இன்று நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு நான் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் பேதங்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌ;வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தபோதும் நான் மட்டும் இனப்பிரச்சனை தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்தும் கூறிவருகின்றேன் என அப்பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

இக்கட்டத்தில் எனது நடவடிக்கைகள் பற்றியும் வேறுசில முக்கிய விடயங்கள் பற்றியும் சிறுவிளக்கம்தர கடமைப்பட்டவன். தம்பி பிரபாகரனுடன் எனக்குள்ள உறவு திரிக்கப்பட்டு என்னை ஓர் ஜென்ம விரோதியாக பிரபாகரனை யார் நம்ப வைத்தார்களோ அவர்களில் பலர் இன்று அரசுடன் உறவாடுகின்றனர். பத்திரிகைகளை மிரட்டி என்னை துரோகியாக எடுத்துக்காட்டினர் என்பதால் பத்திரிகைகளுடன் நான் விரோதம் காட்டவில்லை. இன்று நிலைமை வேறு. சுதந்திரமாக அவர்கள் செயற்பட வேண்டும். தமிழ் மக்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்க வேண்டும். தலைவர் அமிர்தலிங்கம் பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொல்லப்படவில்லை. அவர் கடுகளவும் அதை விரும்பவில்லை. ஆனால் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை வைத்து இன்றும் பிழைப்பு நடத்தும் சிலரைப் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாட்டின் நிலை தெரியாமல் பிற நாட்டிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென தப்பாக மக்களை வழிநடத்திய இரு பிரபல ஊடகவியலாளர்கள் இன்றாவது தமது தவறை உணர்ந்து பரிகாரம் தேடவில்லை. அவர்களின் சிபாரிசில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வரலாறு தெரியாது ஆயுதம் தாங்கி போராடியவர்கள் எல்லோரும் வேலையற்றவர்கள் என்றும், ஜெனீவா தீர்மானம் தன் முயற்சியால் உருவானதாகவும், மூன்று மாதங்கள் தான் வெளிநாட்டிலிருந்து இப்பணியில் ஈடுபட்டிருந்;ததாகவும், இவ்வாறு வேறுபல காரணங்களை ஒன்றுக்கொன்று முரணாக கூறும் போதேனும் அவரை கண்டித்திருக்கலாம். இவ்விரு வெளிநாட்டு எழுத்தாளர்களால்தான் இத்தகையோர் பாராளுமன்றம் சென்றனர். விடுதலைப் புலிகள்தான் பெரும்பாலானவர்களை சுட்டுக்கொன்றனர் எனக் கூறிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் போல செயற்படுகின்றவரும் அவரே. பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றும் விரைவில் வருவார் என வேறொருவர் தெரிவித்த ஒரு சில நாட்களுக்குள் திருகோணமலையில் 300இற்கு மேற்பட்டவர்களும், வேறு பலரும் கைது செய்யப்பட்டதும் அவரின் சிந்தனையற்ற பேச்சே இன்று பல்கலைகழக மாணவர்களும், வேறுபல அப்பாவிகளும் கைது செய்யப்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேரால் பலகோடி ரூபாய்களை பிறநாட்டில் சேகரித்து எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது தெரியாத நிலை. அத்தகைய முன்சிந்தனையற்ற கூற்றுக்களால் ஏற்படும் குற்றம் குறைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எத்தனை காலம் பங்கேற்க முடியும்? இது எமது கட்சிக்காரர் தினமும் கேட்கும் கேள்வியாகும். தமிழரசுக்கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து பங்கேற்க முடியாது. நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தொடங்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை நடந்தேறிய பல பேச்சுவார்த்தைகளில் ஒன்றிலாவது எம்முடன் ஆலோசனை நடத்தாத பட்சத்தில் தொடர்ந்து அவர்களுக்கு பல்லக்கு தூக்குவதா என்பதை அவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யுங்கள் என மக்களை வற்புறுத்தியவர்கள்தான் பதில் கூற வேண்டும்.

எது எப்படியிருப்பினும் எம்மை அவர்களது பல்லக்கு தூக்குபவர்களாக கணிக்காது இதயசுத்தியுடன் உண்மையை பேசி உழைக்க முழு ஒற்றுமையை தமிழ் தேசிய கூட்;டமைப்பிற்கு தொடர்ந்து வழங்க தமிழர் விடுதலைக்கூட்டணி தயாராக உள்ளது. தமிழரசுக்கட்சி தமது வெளிவராத உண்மைகளை மறவாது செயற்பட வேண்டுமென தந்தை செல்வாவின் ஆத்மா நிம்மதியின்றி அலைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. எல்லா நேரமும் மக்களை ஏமாற்ற முடியாது. விரைவில் ஒருநாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப்பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புக்களை சந்திக்க வேண்டிவரும். எந்தவொரு தினசரியையும் நான் தனிப்பட்ட முறையில் குறைகூறவில்லை. ஊடகவியலாளர்களை பலிகொடுத்த அவர்களின் அச்ச உணர்வை கவனத்திலெடுக்க வேண்டும்.
பெரும்பான்மை மக்களை முறைப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐயமிருப்பின் அவ் ஐயத்தை போக்கக்கூடியதும், அவர்கள் ஏற்கக்கூடியதுமான இந்திய அரசியலமைப்பை ஏற்க வைக்க உதவுமாறு திரு. சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகின்றேன்.


வணக்கம்

வீ.ஆனந்தசங்கரி
செயலாளர்-நாயகம்
தமிழர்விடுதலைக் கூட்டணி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com