Thursday, January 3, 2013

அமெரிக்காவில் இனி செல்வந்தர்களுக்கு அதிக வரி!!!

அமெரிக்காவில் கோடீஸ்வர்கள், செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவின் இரு பிரதிநிதிகள் சபையிலும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ஏற்கனவே இம்மசோதா செனட் சபையில் நிறைவேறியிருந்த நிலையில், பிரதிநிதிகள் சபையிலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், தனிநபர் வருமானம் 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்தாலோ, அல்லது குடும்ப வருமானம், 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் இருந்தாலோ அவர்கள் செல்வந்தர்களாக கருதப்பட்டு, அவர்கள் அதிக வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில், இம்மசோதாவுக்கு ஆதரவாக 257 வாக்குகளும், எதிராக 167 வாக்குகளும் கிடைத்தன.இம்மசோதாவுக்கு குடியரசு கட்சி பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன், அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, சுமூக உடன்பாடு ஏற்பட்டது. தற்போது இம்மசோதா இரு சபைகளிலும் ஒப்புதலை பெற்றதை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒப்புதலோடு விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்மசோதாவை நிறைவேற்றுவதையே ஒபாமா முக்கிய பிரச்சாரமாக மேற்கொண்டிருந்தார்.

இப்புதிய மசோதா நடைமுறைக்கு வருவதன் மூலம், 98% வீத நடுத்தர வர்க்கத்தின அதிகப்படியான வரிவிதிப்பில் இருந்து தப்பியுள்ளனர். மேலும் அண்மைக்காலமாக நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த அமெரிக்கா கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு இப்புதிய வரி உதவி புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment