Saturday, December 22, 2012

புதிய சீனத் தலைவர் சந்தைச் சார்பு மறுகட்டமைப்பிற்கு சமிக்ஞை காட்டுகிறார். By John Chan

சீனக் கம்யூனிஸட் கட்சியின் (CCP) புதிய பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் டிசம்பர் 7 முதல் 11 வரை “தெற்குப் பயணம்” ஒன்றை மேற்கொண்டிருந்தார் தன்னுடைய தலைமை மற்றொரு சுற்று சந்தைச் சார்பு மறுகட்டமைப்பைச் சுமத்தும் என்னும் தெளிவான தகவலை அனுப்பும் வடிவமைப்பை அது கொண்டிருந்தது; இது சீனப் பொருளாதாரத்தை வெளிநாட்டு மூலதனத்திற்கு இன்னும் திறந்துவிடும். சமீபத்திய 18வது CCP மாநாட்டை தொடர்ந்து இப்பயணம் நடந்தது; இது ஜியை கட்சித் தலைவராக இருத்தி, China 2030 அறிக்கைக்கு இணங்க ஒரு பொருளாதாரச் செயற்பட்டியலையும் ஏற்றது; அது உலக வங்கியுடன் கூட்டாக பெப்ருவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

ஜனவரி-பெப்ருவரி 1992ல் CCP தலைவர் டெங் ஜியாவோபிங் நிகழ்த்திய “தெற்குப் பயணத்தை” மறுபடியும் செய்யும் வகையில் ஜி நடக்க முற்பட்டார்; அது முன்னாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட சில வாரங்களுள் நிகழ்ந்தது. டெங்கின் பயணம் 1978ல் தொடங்கிய முதலாளித்துவ மீட்பு வழிவகையைப் பெரிதும் விரைவுபடுத்தியது. இராணுவத்தின் ஆதரவுடன் டெங் நீடித்த உள் விவாதங்களுக்கு முடிவு கட்டினார்; அவை 1989 தியனன்மன் சதுக்க எதிர்ப்பு மற்றும் அடக்குமுறையைத் தொடர்ந்து, சீனா முழுவதையும் ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்காக உலகப் பெருநிறுவனங்களுக்கு மாற்றியது. மூலதனங்கள் வெள்ளமென வந்த நிலையில், பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அரசு நிறுவனங்கள் என்பதில் இருந்து பணிநீக்கம் பெற்று கூட்டுப் பங்கு நிறுவனங்களில் மறுகட்டமைக்கப்பெற்றனர் அல்லது நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன.

உலக நிதியச் செய்தி ஊடகம் ஜியின் தகவலை கவனியாமல் இல்லை. லண்டனைத் தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ் பயணம் பற்றி “ஜி பொருளாதாரச் சீர்திருத்த நம்பிக்கைகளை சீனாவில் தூண்டுகிறார்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் ஆதரவாக எழுதியது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆர்வத்துடன் குறிப்பிட்டது: “சீனாவின் புதிய தலைவர் ஜி ஜின்பிங் பொருளாதாரத்தை இன்னும் தாராளமயமாக்கும் உறுதிப்பாட்டிற்கு அடையாளம் காட்டியது போல் தோன்றுகிறது.”

ஜியின் “தெற்குப் பயணம்” அடையாளமுறையில் நிறைந்திருந்தது. 1992ல் டெங் நின்ற இடங்கள் அனைத்தையும் இவரும் அடக்கியிருந்தார்; இவற்றுள் Guangzhou மற்றும் Shenzhen ஆகியவையும் இருந்தன; அவருடன் கூடச் சென்றவர்களில் டெங்குடன் சென்றிருந்த மூத்த அதிகாரிகள் இருந்தனர். தெற்கு குவாங்டோங் மாநிலம் 1978ல் இருந்து டெங்கினால் அவருடைய சந்தைச் சார்பு நடவடிக்ககளுக்குச் “சோதனைக் களமாகப் பயன்படுத்தப்பட்டது”; அங்கு தனியார் ஏற்றமதி நிறுவனங்கள் சிறந்து விளங்கின.

Shenzhen இல் டெங், ஜியின் தந்தை ஜி ஜோங்சன்னை சீனாவின் முதல் “சிறப்புப் பொருளாதாரப் பகுதியை” 1980 ல் நிறுவுவதற்கு நியமித்திருந்தார் அங்கு ஜி, டெங்கின் சிலைக்கு முன்னால் மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார். பார்வையாளர்களிடம ஜி கூறினார்: “கட்சியின் மத்தியத் தலைமை சீர்திருத்தம் பற்றியும் திறந்துவிடுவது பற்றியும் எடுத்துள்ள முடிவு சரியானதே... நாம் தளர்வின்றி நாட்டை வளப்படுத்தும் பாதையை மேற்கொள்ள வேண்டும்; ஆனால் நாம் இதை இன்னும் அதிகமாகத் திறந்துவிட வேண்டும்.”

அரச செய்தி ஊடகம் ஜியை மக்கள் தலைவர் என்று சித்தரித்துள்ளது; கட்சி அதிகாரிகளை இவர் ஆடம்பர விழாக்களை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவருடைய பயணத்தின்போது இவர் மலர்ச் செண்டுகள் பெறுவதை அகற்றி, குறைந்தப்பட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டு, பெரிய ஓட்டலில் முதன்மை வசதியிடங்களை தவிர்த்து, மலிவான உணவுகளைத்தான் உட்கொண்டார். வறிய குடும்பங்களைப் பார்வையிட்டு, காண வந்தவர்களுடன் கைகுலுக்கினார். இத்தகைய பூச்சு நடவடிக்கைகள் ஜியின் சந்தைச் சார்பு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பட்டமான மறைப்பு ஆகும்; நிகழ்ச்சி நிரல் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தும்.

ஐரோப்பா, வட அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கம் மற்றும் மந்த நிலை சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவையை மிகவும் குறைத்துள்ளன. இதையொட்டி அலையென தொழில்துறை அமைதியின்மை கட்டவிழ்க்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. சீன ஏற்றுமதிகள் கடந்த மாதம் ஆண்டுக்கணக்கில் 2.9%தான் உயர்ந்தன; இது அக்டோபர் மாதம் ஏற்பட்ட 11.6% சரிவையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. பொருளாதார வளர்ச்சி பெரிதும் ஊக்க நடவடிக்கைகளால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது; இந்த ஆண்டிற்கு 160 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்ட்டுள்ளது; இதையொட்டி பெரும் கூடுதல் திறன்கள் ஏற்பட்டுவிட்டன. மிகவும் அதிகமாகக் காணப்படுவது சொத்துக்கள் துறையில்தான்; இதுதான் பரபரப்பான ஊகவணிகத்தின் குவிப்பாக உள்ளது. சின்ங்குவா பல்கலைக்கழகப் பேராசிரியர் பாட்ரிக் சோவன்ஸ் கருத்துப்படி, தற்பொழுதுள்ள வீடுகள் சொத்துக்களை சீனாவில் விற்பதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் பிடிக்கும். வணிக அலுவலக இடங்களை விற்பதற்க 9.2 ஆண்டுகளும் சில்லறை விற்பனை இடங்களை விற்பதற்கு 8.8 ஆண்டுகளும் பிடிக்கும்.

அதிகாரபூர்வமாக, நகர்ப்புற வேலையின்மை விகிதம் 4.1 சதவீதம் ஆகும். ஆனால் ஒரு சமீபத்திய அளவை, நிதிய, பொருளாதாரத் தென்மேற்கு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு உண்மையான தரம் 8.05% எனக் கண்டறிந்துள்ளது; 200 மில்லியன் உள்நாட்டு இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களிடையே ஓராண்டிற்கு முன் இருந்த 3.4% என்பதில் இருந்து 6% என்று கடுமையாக உயர்ந்துள்ளது.

சமூக சமத்துவமின்மை மேலும் கூர்மையான நிலைக்கு உயர்ந்துள்ளது. Survey and Research Centre for China Household Finance (சீன வீட்டு நிதியம் பற்றிய அளவை மற்றும் ஆய்வு மையம்) நடத்தியுள்ள புதிய ஆய்வு நாட்டின் கினி குணகம் 2010ல் 0.61 என ஒரு தசாப்தம் முன்னிருந்த 0.412ல் இருந்து உயர்ந்துவிட்டது என்பதைக் கண்டறிந்துள்ளது; இது சீனாவை தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு இணையாக வைக்கிறது. கினி குணகம் என்பது வருமானச் சமத்துவம் குறித்த தரமான அளவை ஆகும்; இது 0 என்பதில் இருந்து 1 வரை, அதாவது முழுச் சமத்துவத்தில் இருந்து முழுச் சமத்துவமற்ற நிலையின் அளவு ஆகும்.

சமீபத்திய மாதங்களில் போர்க்குணம்மிக்க சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களால் தென்னாபிரிக்கா அதிர்ச்சியில் இருப்பதுபோல், சீனாவிலும் வெடிப்புத்தன்மை மிகுந்த சமூக அழுத்தங்கள் வெளிப்பாடுகளைக் காண்கின்றன. ஹாங்காங் தளமுடைய தென் சீன மார்னிங் போஸ்ட் Shenzhen க்கு ஜி சென்றிருந்தபோது, 3,000 தொழிலாளர்கள் ஹுவாகை அச்சு மற்றும் பொதியல் ஆலையில் இருப்பவர்கள் நெடுஞ்சாலையை தடைக்கு உட்படுத்தினர், “ஏராளமான ஆயுதமேந்திய பொலிசாரால் அகற்றப்பட்டனர்” என்று தகவல் கொடுத்துள்ளது. பல தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர், பொலிசால் அடிக்கப்பட்டனர்.

தன்னுடைய சந்தைச் சார்பு செயற்பட்டியல் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பைத் தூண்டும் என்பதை ஜி நன்கு அறிவார். அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களிடம் ஜி கூறினார்: “பாதகமான உள்நாட்டு, வெளிநாட்டு விளைவுகள் நீண்ட காலம் இருக்கும், சிக்கல் வாய்ந்தவையாக இருக்கும், சுற்றிச்சுற்றி வரும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். மோதல்களில் இருந்து தப்பியோட முயற்சி செய்யக்கூடாது, பிரச்சினைகளை மூடி மறைக்கக் கூடாது.”

ஜியின் பயணத்தின் முக்கியக் கூறுபாடு 1970, 1980 களில் அவருடைய தந்தையாரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த குவாங்டோங் இராணுவத் தளங்களை பார்வையிட்டது ஆகும். தன்னுடைய பங்கிற்க இவர் தென் சீன கடற்படையையும், உயர்மட்ட 124வது Amphibious Mechanised Division (தரை, நீர் இரண்டிலும் இயந்திர வகையைக் கையாளும் பிரிவு) ஐப் பார்வையிட்டது தென் சீனக் கடலில் எழுந்துள்ள அழுத்தங்களை முகங்கொடுக்க உண்மையான போர் உணர்வை” உறுதிப்படுத்துவதற்காகும். அமெரிக்கா அவ்விடத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமிற்கு தங்கள் நிலப்பூசல் அழுத்தங்களை சீனாவுடன் அதிகரிக்குமாறு தூண்டுப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஜி இராணுவம் தொழிலாளர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் என்பதை உறுதிபடுத்துவதில் தீவிரமாக உள்ளார். “எந்த நேரம், எந்தச் சூழ்நிலையாயினும், [இராணுவம்] கட்சியைக் கேட்டு அதைப் பின்பற்ற வேண்டும்” என்று ஜி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இக்கருத்துக்களின் பின் தொழிலாள வர்க்கத்துடனான மோதலில் 1989 எழுச்சியின் போது நடந்ததுபோல், தொழிலாளர்கள் எதிர்ப்பாளர்கள், வேலைநிறுத்தக்காரர்களுக்கு பரிவுணர்வு காட்டி அவர்கள்மீது சுடமறுத்த நிகழ்வு பற்றிய அச்சம்தான் இருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com