Monday, December 31, 2012

முதலாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண்ணியிட்டது இந்தியா அணி !

சென்னை ஒருநாள் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரு 20 ஓவர் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டியில்இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் முடிந்தது.

அடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் போட்டி பாதிக்குமோ என ரசிகர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால் இரவில் மழை இல்லை.

இன்று காலையில் வெயில் அடித்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மழை காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருந்ததால் சேதம் அடையா மலும் மழை நீர் புகாமலும் இருந்தது.

ஆனால் ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் ஓவர் குறைக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் . பேட்ஸ்மேன்களுக்கு முதல் 20 ஓவர் கடினமாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்தார். அறிவித்தபடி 10 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், காம்பீர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் கேப்டன் கணிப்புபடி மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைத்கான், முகமது இர்பான் அசுரவேகத்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். 3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 17 ரன்களே எடுத்து இருந்தது. 4-வது ஓவரில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஜுனைத்கான் பந்தில் ஷேவாக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து கோலி வந்து காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் மோசமான நிலையில் இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. காம்பீர் 8 ரன்னில் இர்பான் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தொடர்ந்து கோலி ரன் எடுக்காமலும், யுவராஜ்சிங் 2 ரன்னுடனும் அடுத்தடுத்து கிளீன் போல்டு ஆனார்கள்.

அடுத்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.6 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களுடன் பரிதாபமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் அபாரமாக பந்துவீசி ஷேவாக், கோலி, யுவராஜ்சிங் ஆகிய 3 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், காம்பீர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரெய்னாவும், ரோகித்சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரோகித் சர்மா 4 ரன்னில் ஜுனைத்கான் பந்தில் அவுட் ஆனார். 5 விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் டோனி களம் இறங்கினார். அவர் ரெய்னாவுடன் நிலைத்து நின்று ஆடி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டார்.

5 விக்கெட்டுகள் விழுந்தபோது இந்தியா 9.4 ஓவரில் 29 ரன் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு டோனி- ரெய்னா ஜோடி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தி 31-வது ஓவரில் 100 ரன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்கோர் 102 ரன் ஆக இருந்தபோது சுரேஷ் ரெய்னா முகமது ஹபிஸ் பந்தில் போல்டு ஆனார். ரெய்னா 88 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தார்.

ரெய்னா அவுட் ஆனதும் தமிழக வீரர் அஸ்வின் வந்தார். ஆட்டத்தில் 39-வது ஓவரில் டோனி பிரிஹிட் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சக்சர் அடித்தார். அடுத்து அரை சதத்தை தொட்டார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் டோனி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி சதம் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 113 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களுடனும், களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது தொடக்க வீரர்களாக முகமது ஹபீஸ்சும், நசிர் ஜாம்ஷெட்டும் களம் வந்தனர் புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரில் முகமது ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார்.

அடுத்து வந்த அசார் அலி 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த யூனுஸ்கான், ஜாம்ஷெட்டுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி ரன் சேர்த்தனர். நசிர் ஜாம்ஷெட் அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து யூனுஸ்கான் 50 ரன்னை தொட்டார். திண்டா வீசிய 31- வது ஓவரில் யூனுஸ்கான் 58 ரன் அடித்திருந்த போது அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக வந்த மிஸ்பா உல் ஹக் 16 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 172 ரன்னாக இருந்தது.

அடுத்து வந்த சோயிப் மாலிக், நசிர் ஜாம்ஷெட்டும் ஜோடி சேர்ந்து விளையாடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜாம்ஷெட் பொருப்புடன் விளையடி சதம் அடித்தார். இந்த விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். இறுதியில் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாம்ஷெட் 101 ரன்களுடனும், மாலிக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com