Saturday, December 8, 2012

வடக்கிலிருந்து நாம் படையினரை முழமையாக வெளியேற்ற வேண்டும் என கூறவில்லை- சம்பந்தன்

வடபகுதியிலிருந்து படைமுகாம்களை முழுமையாக அகற்றவேண்டுமேன்றோ விலக்கிக்கொள்ள வேண்டுமென்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நாடாளுமன்றில் உரையாற்றுகையில்,

எம்மை புலிகள் என்றும், புலிகளின் பிரதிநிதிகள் என்றும் கூறுவது தவறு. புலிகள் தாம் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும், விதிமுறைகளையும் மதிக்காததன் காரணமாக அழிந்து போனவர்கள் அவர்கள் அழிக்கப்படவில்லை. அவர்களாகவே அழிந்து போனார்கள். இன்று யார் யாரோ புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

சிவிலியன்களையும் அரசியல் தலைவர்களையும் கொன்றதாலே புலிகள் பயங்கரவாத இயக்கமாக மாறியது. எனது நண்பர்கள் சகாக்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டனர். நானும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தேன். புலிகளை பலவீனப்படுத்த முன்னாள் அமைச்சர் கதிர்காமர் சர்வதேச ரீதியில் பெரும் பங்கு வகித்தார். அவர் கொல்லப்பட்டார். புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர். ஆனால் தமிழர் பிரச்சினை முடியவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் இந்தப் பிரச்சினை தீராது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தமது பகுதிகளில் சுயகெளரவத்துடன், நிம்மதியாக சுதந்திரமாகவே வாழ விரும்புகிறார்கள். அவர்களோ நாமோ இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்று கூறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் சேவை அவசியம்.

எனினும் இராணுவத்தினர் திட்டமிட்டு குடியேற்றப்படும் நடவடிக்கை மிகவும் சூட்சுமமாக நடைபெறுவதாக உணர்கிறோம்.

பிரிக்கப்படாத நாட்டினுள் ஐக்கியமான தீர்வை எதிர்பார்த்தே போராட்டம் நடத்தினோம். சாத்வீகமான போராட்டத்தினால் தீர்வு வராததாலே புலிகள் இயக்கம் உருவானது. ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே புலிகளை உருவாக்கினர்.

யுத்தத்திற்கு முன்னர் இருந்த இடங்களில் மட்டுமே அவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் புலனாய்வு செய்யலாம், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்கு குந்தகமாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

1 comments :

Anonymous ,  December 8, 2012 at 6:08 PM  

An entertainment of political entertainer who performs difficult acts such as balancing in high ropes.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com