Friday, December 14, 2012

நாட்டுக்கு எதிராக தலைதூக்கியுள்ள தீய சத்திகளுடன் எல்ரிரியும். ஜனாதிபதி

பிரதம நீதியரசருக்கு எதிராக சட்டரீதியாக இடம்பெறும் குற்றவியல் பிரேரணை செயற்பாட்டின் ஊடாக நாட்டிற்கு எதிராக செயற்படும் சக்திகள் தலைதூக்கி வருவதாகவும் இந்த சூழ்ச்சிகாரர்களுடன் எல்ரிரிஈ ஆதரவாளர்களும் டொலர்களை கொண்டு வாழும் நாட்டிற்கு எதிரான அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் ஒரு சில அரசியல் சட்டத்தரணிகளுடன் இணைந்து இந்த சூழ்ச்சியை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தி பிரிவு பொறுப்பதிகாரிகளுடனான சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்;டுக்களை ஆராய்ந்த குழுவின் அறிக்கை தன்னிடம் கிடைத்ததன் பின்னர் எடுக்க வேண்டிய சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றவியல் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தனது விசாரணைகளை முடித்துள்ளதாகவும் இதன் அறிக்கை தன்னிடம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கை கிடைத்ததன் பின்னர் சுயாதீன குழுவொன்றுடன் கலந்துரையாடி பின்னர் அரசியலமைப்பிற்கு  ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எந்தவொரு அறிக்கையும் தன்னிடம் கிடைத்த உடன் சுயாதீன குழுவொன்றுடன் கலந்துரையாடுவதாகவும் இதன் ஊடாக சரியான தீர்மானங்களை எடுப்பது இலகுவாக அமையும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான குழுவொன்று தொடர்பாக யாப்பு ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ தேவை ஏற்படாத போதிலும் அறிக்கை தொடர்பாக பரவலான தெளிவை பெற்றுக் கொண்டு  அடுத்த கட்ட நடவடிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு இது வசதியாக அமையுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குற்றவியல் பிரேரணை அரசாங்கத்தின் தேவையாக அமையவில்லையென்றும் எதிர்கட்சியின் தேவையாகவே இது அமைந்ததென்றும் ஜனாதிபதி மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  கடந்த பல மாதங்களுக்கு முன்னர் இருந்தே பிரதம நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வட்புறுத்தி வந்ததாகவும் ஜேவிபி உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஊடகவியலாளர் சந்திப்புக்களில் பிரதம நீதியரசருக்கும் அவரது கணவரான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வந்தமையை அவர் நினைவூட்டியுள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்த விசேட தெரிவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, குற்றவியல் பிரேரணையின் விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் யாப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்றன எனவும் பிரதம நீதியரசர் தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதல் பிரதம நீதியரசருக்கும் அவரை பிரநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளுக்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றவியல் பிரேரணையின் போது  விசாரணை குழு முன்னிலையில் குற்றச்சாட்டுக்கு இலக்கான பிரதம நீதியரசருடன் அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சட்டத்தரணி மாத்திரம் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு  எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணையின் போது சட்டத்தரணிகள் குழுவொன்றின்  ஆதரவை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்  ஆஜராவதற்கும் சகல வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்ததாகவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தெரிவுக்குழுவிலுள்ள 11 உறுப்பினர்களும் அறிவார்கள். வாய் மூலமும் எழுத்து மூலமும் சாட்சியங்களை வழங்குவதற்கு திருமதி பண்டாரநாயக்காவிற்கு அளவுக்கு அதிகமான காலவகாசம் வழங்கியிருந்தது. எனினும் இவ்வாறான நிலைமையில் அவர் குழுவிலிருந்து வெளியேறுவதற்கு திட்டமிட்ட வகையில் செயற்பட்டதாகவும் அமைச்சர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே நேரம் ஆரம்ப தினத்திலேயே விசாரணைகளை ஆரம்பிக்கும் போது பிரதம நீதியரசர் நிரபராதியென்பது குறித்து சத்தியபிரமாணம் செய்ய வேண்டியிருந்தபோதும் பிரதம நீதியரசர் முதலாவது தினத்திலேயே அதனை நிராகரித்தார் என்றும் இதன் மூலம் அவர் இந்த தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறிச் செல்வதற்கும் அதன் பின்னணியிலும்; அரசியல் செயற்பாடு இருப்பது தெளிவாகியது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசரின் இந்த செயற்பாட்டின் மூலம் அவர் பாராளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் அவமதித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். பொது மகன் ஒருவனுக்கு எதிரான வழக்கின் போது தனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையென கூறி அவர் வெளியேறினால் அவர்க்கு ஏற்படும் துர்ப்பாக்கிய நிலை என்னவாகுமென்பதை அமைச்சர் வீரவன்ச வினவியுள்ளார்.

இதற்கு முன்னைய குற்றப்பிரேரணைகளுக்கு இலக்கான பிரதம நீதியரசரின் செயற்பாட்டை தற்போதைய பிரதம  நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உதாரணமாக கொள்ள வேண்டுமென  அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுக்கு இலக்கான பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் அதற்கு முகம் கொடுத்து பதவியை இராஜினாமா செய்தார். இதன் ஊடாக நீதிமன்றம் இன்றும் பாதுகாக்கப்படுவதாக ஆசிரியர் பீட தலைவர்கள் மத்தியில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பிரேரணை ஊடாக நீதிமன்றத்திற்கோ நீதித்துறைக்கோ அழுத்தங்களை கொடுக்கவில்லையென்றும் 1978 ஆம் ஆண்டு யாப்பிலுள்ள சரத்துக்களின் படி பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடைமுறைப்படுத்துப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

விசேட தெரிவுக்குழுவிலிருந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேறியமை அவர்கள் யாப்பிற்கும் பாராளுமன்ற சம்பிரதாயத்தையும் இழிவுப்படுத்தியதாக அமைச்சர் பிரேம் ஜயந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். குற்றவியல் பிரேரணைகளில்; குற்றங்கள் நிருபிக்கப்பட்ட பின்னரும் பிரதம நீதியரசர் பதவியில் இருப்பது ஒழுக்க ரீதியிலான பிரச்சினையை எழுப்புவதாக ஆசிரிய பீட தலைவர்கள் மத்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com