Wednesday, November 21, 2012

நிதர்சனம் நிச்சயம் கசக்கும்

2007 இல் கிளிநொச்சி எப்போதும் போல இயங்கிக்கொண்டிருந்தது. மக்களும் போரின் நடுவே
தங்கள் வாழ்வை நடத்திக்கொண்டிருந்தனர். மக்களே புலிகள் புலிகளே மக்கள்’ என்ற பிரபலமான சுலோகத்துடன் ஆட்சேர்ப்புகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. தாமாக முன்வந்து தமது பிள்ளைகளைப் புலிகளின் படையணிகளில் இணைத்தவர்கள்
மதிப்பளிக்கப்பட்டார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் உசுப்பேற்றும் அறிக்கைகளை விட்டபடி கொழும்பிலே இருந்தனர். புலம்பெயர் தமிழர்கள் பந்தயக் குதிரையில் பணங்கட்டிய பணக்காரர்கள் போல ‘ஸ்க்கோர்’ விபரம் அறிய ஆவலாய் இருந்தனர்.

2008

போர் மக்களைத் துரத்தியது. இடம்பெயர்ந்த மக்களைப் பின்தொடர்ந்து ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ம் துரத்தியது. எவரும் விரும்பிச் சேரத் தயாராக இல்லை. விட்டுவிட ‘அவர்களும்’ தயாரில்லை.
தப்புவதற்காக தகுதி வயது பாராது திருமணங்கள் நடந்தன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கனகரத்தினம் மட்டும் களத்திலிருந்தார். மற்றவர்கள் எல்லோரும் ‘வீச்செல்லைக்கு வெளியிலிருந்து’ வீரம் பேசினர்.

புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடியுடன் தெருவினில் இறங்கினர்.

2009

கிளிநொச்சி மீண்டும் மெதுவாகத் தன்னை மீளமைக்கத் தொடங்கியது. மக்கள் தத்தமது வாழ்வியலை விட்ட இடத்திலிருந்து தொடர முற்பட்டனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தனது இருப்பை நிலைநிறுத்தப் புதியவர்களுக்கு வலைபோட்டது.

குடும்பத்தை விட்டுவிட்டுச் ‘செஞ்சிலுவையைத் தூக்கிக்கொண்டு’ வவுனியாவுக்குத் தப்பியவர்கள் எல்லாம் தமிழருக்குத் தலைமைதாங்க வன்னிக்கு வந்தனர்.

புலம்பெயர் தமிழர் ‘காட்டுக்குள்ள இன்னும் பொடியள் இருப்பதாகக்’ கதைபேசித் திரிந்தனர்.

2010

மெல்லத் தவழ்ந்து வளர்ந்தது கிளிநொச்சி. மாகாண சபை இலவசமாக வயலை உழுது
விதை நெல்லும் கொடுத்தது. பல வயல்கள் பச்சை ஆடைஅணிந்து பசுமைபோர்த்தின.
கரையோர மக்களுக்கு மீன்பிடி வள்ளங்களும் வலைகளும் படையினரால்
பரிசளிக்கப்பட்டன.

பல்வேறு கட்டுமானங்கள் நாலாபக்கமும் எழும்பத்தொடங்கின. தொழில் தெரிந்த சிலபேருக்கு நல்லவேலை கிடைத்தது. இருப்பினும் தகமையற்ற பலபேர் வேலையற்றிருந்தனர்.

இடையிடையே தேர்தல்கள் வந்து போயின. மக்களுக்கும் புது அனுபவம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்கள் வழக்கமாகக் கேட்ட கதைகளை மீண்டும் சொல்ல மக்களும் நம்பினர். கதிரையை வழங்கினர்.

புலம்பெயர் தமிழர் ‘வன்னியில் வெள்ளைவான் திரிவதாகச் சொல்லிக்கொண்டு’ போர்வைக்குள் படுத்தனர். வந்து பார்த்தவர்களும் மீண்டும் வருவதாகச் சொல்லிக் ‘கம்பி நீட்டினர்’.

2011

கிளிநொச்சி நடக்கத்தொடங்கியது. பல்தேசியநிறுவனங்கள் வங்கிகள் எனச் சிங்காரம் கூடியது.

மக்களில் பலர் தொழிலில் முன்னேறினாலும் தகமையற்றதால் வேலையற்றோர் தொகையும் பெருகிச்சென்றது. மாற்றுவலுவுள்ளோருக்கும் மாற்றுவழிகாட்ட யாருமற்றுக் கிடந்தனர்.

பாவம் இந்த மக்கள்.

எல்லாத் தமிழர்களுக்காவும் இந்த மக்கள் தான் இறுதிவரை விலைகொடுத்தார்கள். இப்போது எம்மவர்கள் எவராவது உதவுவார்கள் என நம்பிக்கையில் காத்திருந்தார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ‘வேண்டாப் பெண்டாட்டியில்’ குற்றம் பிடிப்பதில் குறியாயிருந்தது. மக்களுக்கு அப்பியாசக் கொப்பிகளையும் வாழைக்குட்டிகளையும் கொடுத்துவிட்டு ‘வானத்தைப் பிடிங்கிக் கையில் கொடுத்த தோரணையில்’ பாராளுமன்றத்தில் பிளந்துகட்டியது.

புலம்பெயர் தமிழர்களோ விடுமுறைக்கு வீடுசெல்வதிலும் ஊரிலுள்ள கோவிலுக்கு உபயம் செய்வதிலும் இவர்களை மறந்துபோனார்கள்.

இவர்களை நினைத்தவர்களும் நிறுவனங்களிடம் தமது பணத்தைக் கொடுத்துவிட்டு
பணிமுடிந்ததாக இருந்துகொண்டார்கள்.

2012

கிளிநொச்சி மிகவேகமாக மாறத்தொடங்கியது. மக்களில் பொருண்மிய நிறைவுகண்டோர்
செழிக்க நகரமும் செழிக்கலானது.

ஆனால் மாற்றுத்திறனாளிகளும் தொழில்துறை அனுபவம் அற்றோரும் வறுமையில் வாடினர்.

இவர்களை இப்படியே வைத்திருப்பதுதான் தங்களது கதிரைகளைக் காப்பாற்றும்
எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கணக்குப் போட்டது.

‘அரசாங்கம் உங்களுக்கு என்ன செய்ததது’ எனக்கேட்டபடி தமிழ் ஊடகங்களும் இதற்கு ஒத்து ஊதின.

புலம்பெயர் தமிழர்களும் ஐக்கிய நாடுகள் சபையிடம் நியாயம் கேட்கப்புறப்பட்டனர்.

எவருக்குமே இந்த அபலைகளுக்குக் கைகொடுக்கும் எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை.

திடீரென எல்லோரும் அலறினர். தமிழ் ஊடகங்கள் ஒப்பாரி வைத்து தமிழ் அரசியல்
தலைவர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் திட்டின.

காரணம் வேறொன்றுமில்லை.

கிளிநொச்சிப் படைத்தலைமையகம் பல்வேறு இடங்களில் தொழிற்பயிற்சிகளை
வேலையற்றோருக்கு வழங்கத்தொடங்கியிருந்தது. அத்துடன் இராணுவத்தின் பெண்கள்
படையணிக்கான ஆட்சேர்ப்பிற்கு கிளிநொச்சியில் பெண்களை இணையுமாறு
கேட்டிருந்தது.

இதுநாள் வரை உறங்கிய அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பிறகென்ன.
ஒப்பாரிக்கும் வசைவுகளுக்கும் குறைவில்லை.

17.11.2012


கிளிநொச்சியின் தீர்மானகரமான இன்னொரு தினம்.

இராணுவத்தினரின் படைத்தளம் ஒன்றிலே நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள்
தமது பெற்றோர்களால் இராணுவத்தின் மகளிர் படையணியிலே இணைக்கப்பட்ட செய்தி
மெதுவாகக் கிளிநொச்சியிலே பரவியது.

கிளிநொச்சியின் ஆதரவற்று விடப்பட்ட மக்கள் ஆதரவுக்கரத்தினை நீட்டியவர்களுடன் போகப்புறப்பட்டுவிட்ட செய்தி பலருக்கு இனிப்பாக இருக்காது.

ஆனால் எவருக்கு இந்தச் செய்தி இனிப்பாக இல்லையோ அவர்கள் தான் இந்த முடிவை இம்
மக்கள் எடுப்பதற்கான காரணம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

முதன்முதலாக தமது பிள்ளையை இணைத்த தகப்பனுக்கு இரண்டு கால்களும் இல்லை.
இவரது குடும்பத்தினைக் காப்பதற்கு அவருக்கு இதனைவிட வேறு தெரிவில்லை.
கடந்த மூன்று வருடங்களில் இந்தக் குடும்பத்தைக் கண்டுபிடித்து வேண்டிய
வழியைக் காட்டமுடியாத எவரும் இந்தக் குடும்பத் தலைவர் எடுத்த முடிவை
விமர்சிக்கத் தகுதியற்றவர்கள்.

அப்படித்தான் இந்த 100 குடும்பங்களின் கதையும்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com