Tuesday, October 2, 2012

நிலத்தை விற்க மறுத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரோடு எரித்து கொலை

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ல தோப்பு வளசை என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ள சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் சவுதியில் வேலை செய்து வருகிறன்றது இதன் மூலம் அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு தங்களது பிள்ளைகளான மகள் காளீஸ்வரி (12), மகன் பாலா (7), மகள் சரண்யா (5), சக்தி (ஒன்றரை வயது) ஆகியரோடும், தனது தந்தை கருப்பையாவோடும் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தைக்கொண்டு குடும்பத்தை நடத்தினாலும், இவர்கள் பாய் மற்றும் கிடுகு முடையும் தொழிலையும் செய்து வந்தனர்.

இவர்களுக்கு அருகில் உறவினர்கள் யாரும் இல்லாததால் தனியே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அங்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்கள் சிலர் காளிமுத்துவுக்கு சொந்தமான அந்த ஒரு ஏக்கர் நிலத்தை விற்கும் படி கேட்டுள்ளனர்.

ஆனால் காளிமுத்தோ அந்த நிலத்தை விற்க வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. அதனால் தரமுடியாது என்று மறுத்துள்ளார். இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்கள் அக்கம் பக்கம் நிலத்தை வளைத்து வாங்கியதோடு, மீதமிருக்கும் காளிமுத்துவின் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்குவதையே குறியாக இருந்தனர். அவர் தர மறுத்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அடியாட்களை வைத்து காளிமுத்துவை மிரட்டியுள்ளனர்.

இதனால் காளிமுத்து, உச்சிப்புளி காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் செய்திருக்கிறார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது வீட்டை சூழ்ந்து கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த இவர்கள் வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக கதவின் வெளித்தாழ்ப்பாளை அடைத்துவிட்டு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

சுற்றிலும் காரைச்சுவர், உயரே கூரை வேய்ந்திருந்த அந்த வீடு தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. வெளியே வரமுடியாமல் தவித்த காளிமுத்து, அவரது தந்தை, தனது பிள்ளைகள் 4 பேர் உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே கருதி இறந்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களது உடல்களை சம்பவ இடத்திலேயே அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர். வீட்டின் கதவில் முன்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்ட பொலிஸார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com