Monday, September 3, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு ஆரியசிங்கவிடம்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கும் பொறுப்பு, ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுடன் ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க பேச்சுவார்ததை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் ஒரு கட்டமாக கடந்த வாரங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்ப்பு வெளியிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைகுறித்து விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment