Sunday, September 23, 2012

உளவாளிகளின் நாக்குகளை வெட்டினோம். உளவுப் பிரிவுத் தலைவர் பிரித்தானியாவில் ஒப்புதல்!

உண்மைகள் காற்று நிரப்பிய பலூன்களுக்கு ஒப்பானது. அற்றை வெளிவராமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளானது காற்று நிரப்பிய பலூண்களை நீரினுள் அமிழ்த்தி வைத்திருப்பதற்கான முயற்சியை ஒத்தது. காற்று நிரப்பிய பலூண்களை நீரினூள் எத்தனை முயற்சி செய்து அமிழ்த்தி வைத்திருந்தாலும் அது என்றோ ஒருநாள் இயற்கை அனர்த்தத்தின் ஊடாகவேனும் வெளிவந்தேதீரும்.

மேற்சொன்னவாறுதான் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிகளின் தலைமை பலமாக இருந்தபோது அவ்வியக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் அவர்களின் ஊடக பலத்தினால் மறைக்கப்பட்டது, திசைதிருப்பப்பட்டது ஏன் நியாயப்படுத்தப்பட்டதும்கூட. ஆனால் இன்று அவ்வியக்கம் பல பிரிவுகளாக உடைந்து நிற்கின்ற நிலையில் மாயைத்திரைவிலகி, மக்கள் பல உண்மைகளை அறியமுடிகின்றது.

பிரித்தானியாவில் பிளவுபட்டு நிற்கும் தலைமைச்செயலகம் , அனைத்துலகச் செயலகம் எனும் இருபிரினரும் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர். அண்மையில் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய தலைமைச்செயலகத்தை சேர்ந்த சீர்மாறன் என்கின்ற நபர், புலிகளியக்கத்தின் புலனாய்வுப் பிரிவில் சித்திரவதைகளுக்கு பொறுப்பாக இருந்ததாகவும் தம்மிடம் பிடிபட்ட புலனாய்வாளர்களின் நாக்குகள் மற்றும் கைகளை வெட்டி அவர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் பிரித்தானிய பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததன்மூலம் காட்டிக்கொடுத்துவிட்டார் என நெடியவன் தலைமையிலான தலைமைச் செயலகத்தினரால் வெளியிடப்படும் கறுப்பு எனும் பத்திரிகை சாடியுள்ளது. ( பத்திரிகையின் 2ம் பக்கம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது)



புலிகளியக்கத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோடியுள்ளோர் அங்கு பல உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். அரசியல் தஞ்சம்கோரும் அவர்கள் புலிகளியக்கத்தில் தாம் மேற்கொண்ட கொடுமைகளை அப்படியே போட்டுடைத்து இவ்வாறான செயல்களை தாம் தலைமையின் வற்புறுத்தலின்பேரிலேயே செய்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தஞ்சம் கோரும் புலிகளியக்க உறுப்பினர்கள் தாம் அவ்வியக்கத்திலிருந்தபோது, பல இளைஞர் யுவதிகளை பலவந்தமாக இயக்கத்திற்கு பிடித்துசென்றதாகவும் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் இறந்துள்ளதுடன் இறந்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களால் தமக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்றும் பிடித்துச்செல்லப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் இராணுத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின்னர் விடுதலையாகி பிரதேசங்களில் வசிப்பதாகவும், அவர்களால் தாம் தாக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் உண்டு எனவும் இதனால் தாம் இலங்கைக்கு திரும்ப முடியாது எனவும் கூறுகின்றனராம்.

அத்துடன் சிலர் தாம் புலிகளியக்கத்திலிருக்கும்போது மேற்கொண்ட கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தம்மை இன்றும் உறுத்துவதாகவும் தாம் உளவியல்ரீதியான பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளதாகவும் வைத்தியம் பெற்று வருகின்றார்கள் என சுவிட்சர்லாந்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நபர் ஒருவர், 2002 ஆண்டு ரணிலுடன் புலிகள் ஒப்பந்தம் செய்திருந்து காலத்தில் புலிகளியக்கத்திற்கு எதிரானவர்களை தான் தேடித்தேடிச் சுட்டுக்கொன்றதாகவும், அவ்வாறு வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாற்று இயக்க உறுப்பினர் ஒருவரை சுட்டபோது அவர் குற்றுயிராக கிடந்து, எனக்கு 3 பிள்ளைகள் உண்டு என்னைக்காப்பாற்றுங்கள் எனக் கெஞ்சியபோது மேலும் அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கொன்ற சம்பவம் தன்னை மிகவும் வருத்துவதாக கூறுகின்றாராம். தற்போது மனநோயாளியாகவும் , மதுவுக்கு அடிமையாகவும் உள்ள இவர் தனது நிலைக்கு புலிகளின் தலைமையே பொறுப்பு எனவும் கூறுகின்றாராம்.

அத்துடன் அந்தநாட்டிலே புலிகளுக்கு நிதி உதவி வழங்கியோரிடம் நீங்கள் வழங்கிய பணமே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எனவும் சண்டை போட்டுக்கொள்கின்றாராம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com