Thursday, August 23, 2012

த.தே கூட்டமைப்பு ஒன்றும் மகான்களல்ல! அவர்கள் மிகக் கேவலமான அரசியல்வாதிகள்- சந்திரகாந்தன்

தமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல என்றும், மகான்களின் பெயர்களை விளம்பரப் பலகைகளாக்கி வியாபாரம் செய்யும் மிகக் கேவலமான அரசியல்வாதிகள் என கிழக்கு மாகாணசபை முன்னாள் முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாவிதன் வெளியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எம் மக்களை ஏமாற்றுவது எப்படி என்கின்ற வித்தையினை மாத்திரம் நன்கு பயின்றுள்ள த.தே கூட்டமைப்பு அவ்வித்தையினை தொடர்ந்தும் எம் மக்கள் மீது பிரயோகித்து வருகின்றது.

தம்மால் எதனையும் சாதிக்க இயலாது என்று தெரிந்தும் விதண்டா வாதத்திற்கே அவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனவும், அம்பாறை மக்களது வாக்குகளையும் வீணடித்து கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தலை மறைவாகி விடுவதே அவர்களது நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிள்ளையானை வீழ்த்தப் போகின்றோம் எனக் கூறி ஒட்டு மொத்தக் கிழக்குத் தமிழரது வாழ்விலும் விசப் பரீட்சை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும், ஆனாலும் எமது மக்களும் நாமும் நிச்சயமாகத் தோற்கப் போவது கிடையாது என தெரிவித்துள்ளார்.

இவர்களது சுயரூபத்தினை நாம் உணந்து கொண்டது போல, எம் மக்களும் இன்று உணர்ந்திருக்கின்றனர். அரசியல் ரீதியான தெளிவு நிலை இப்போது தான் மெல்ல மெல்ல வெளிச்சமடைந்து வருகின்றது. எமது சமூகத்தினைச் சுற்றியுள்ள மாய வேலியினை நிச்சயம் நாம் உடைத்தெறிவோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment