Thursday, August 23, 2012

குரங்குச்சேட்டைக்கு முற்றுப்புள்ளி.

ஹாரிஸ்பத்துவ பகுதியில் இடம்பெற்று வருகின்ற விவசாய நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி வந்த குரங்கு கூட்டம், அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக பிடிக்கப்பட்டு ரந்தெனிகல பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையினால் ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய மற்றும் அக்குறனை பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் குரங்குச்சேட்டையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. முன்னர் இப்பிரதேசத்தில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பாக்கு உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கைகள் மூலம் வருமானம் பெற்ற பிரதேச வாசிகள், குரங்கு கூட்டங்களின் தொல்லையால், அண்மைக்காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். கூட்டம் கூட்டமாக வருகை தரும் இக்குரங்குகளை கலைப்பதற்கு, பிரதேச வாசிகள் முயற்சித்த போதிலும், அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இக்குரங்குக்கூட்டம் தொடர்பான பிரச்சினை, பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. பாராளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்தனவின் 2 லட்சம ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம், இக்குரங்குகளை, ஆள்நடமாற்றமற்ற பகுதிகளில் விடுவிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட குரங்குகள் இவ்வாறு ரந்தெனிகல பிரதேசத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளன.

பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அநுர மடலூஸ்ஸ, விவசாயிகள் தற்போது தங்களது வழமையான பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வருவதாக, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment