Sunday, July 22, 2012

சாக்கிரதை, சாக்கிரதை, கிழக்கு மாகாணத்துக்கு தொப்பி யாவாரிகள் வருகின்றார்கள் சாக்கிரதை.

– அலியார் மவ்சூக் - இந்த உலகம் பல துன்பங்களையும், துயரங்களையும் அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், நல்லவர்களால்தான்.

சாக்கிரதை - 1

சோனிகள், தொப்பி புரட்டிகள் என்பது தெரியும், ஆனால் இப்படி நிமிடத்துக்கொருதரம் தொப்பிய மாத்துவார்கள் என்பது இப்பதாண்டாப்பா தெரியும் என, தமிழ் பேசும் தமிழர்கள் எல்லாம் வியப்படைந்து, உச்சுக் கொட்டுவதைப் பார்க்கும் போது, நாக்கை புடுங்கி சாக வேண்டும் போல் இருக்கின்றது. எங்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது. எங்களுக் கென்றொரு கொள்கை இருக்கின்றது, எங்களுக்கென்றொரு கோட்பாடு இருக்கின்றது, அதனால் தனித்து கேட்கின்றோம். வென்றபின் அரசுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம். என்ன வாஸ்தவமான வார்த்தைகள்.

தலைவரே, அதைவிட இப்போதே அரசுடன் சேர்ந்து நிற்கலாமே, நின்று, அப்புறம் வென்று, கூட்டாக ஆட்சியமைக்க வேண்டியதுதானே. நோ...நோ... எங்கட தனித்துவம் கெட்டுவிடும், அப்புறம் எங்களை ஒரு சோனியும் மதிக்கமாட்டான், அதனால்தான், ஒற்றைக்காலில், ஒற்றையாக நிற்கின்றோம்.

அது சரி தலைவரே, முந்தா நாளுக்கு முதல்நாள், அரசுடன் சேர்ந்து, தேர்தல் கேட்பதாக, உங்ககட அதியுயர் சபை, கோட்டும் சூட்டுமாக இருந்து, சின்ன சால்வைக்காறருடன் போஸ் கொடுத்து அறிக்கையும் விட்டார்களே.

அது.... வந்து........ போய்...... புடுங்கி..... நாட்டி.... பார்த்ததுல... தொப்பி எங்க தலமயிருகளுக்கு பொருந்தல........ அதனால தொப்பிய புரட்டாம, தொப்பிய அப்படியே மாத்திட்டம்.

வெரிகுட் தலைவரே, வெரிகுட்.... அப்ப ஒரு பத்து நாளைக்கு முன்னாடி, தமிழர் தரப்புடன், பழைய ஈரோஸ் காக்கா ஒரு குட்டிப் பேச்சு வார்த்தை நடாத்தி, சாம்பார்ரெடி...... பரிமாறப்போறோம் என்றாரே. போங்கப்பா. இந்த பத்திரிகை காரங்களான நீங்க எங்கள ஒண்டுக்கும் உடமாட்டயள். ஒண்ணுக்கு போகவும் உடமாட்டயள் போல கெடக்கு.

நாங்க முஸ்லீம்கள், எங்களுக்கென்று கோஷம், கோட்பாடு, கொத்தவரங்கா என்றெல்லாம் நிறைய இருக்கின்றது. எங்களது உரிமைகளை நாங்க எப்பவுமே விட்டுக் கொடுக்கமாட்டோம். அப்படி விட்டுக் கொடுக்காமல் நாங்க இருந்ததால்தான், இன்றைக்கு எமக்கு மந்திரிப்பதவி, ஆளும் கட்சியில் எம்பி பதவி, எமக்கென்று சொந்த வியாபாரங்கள், எமது உறவினர்களுக்கு வாகனக் கோட்டா, இறக்குமதி கோட்டா, நீதிபதிகளையும் மிரட்டக்கூடிய பவர், நடு ரோட்டில் ஈச்சமரம், பெரிய பெரிய ஆசுபத்திரிகள் என அத்தனையும் தந்து இந்த ஆளும் அரசுகள் எங்களை கொள்ளை கொண்டிருக்கின்றன.

பாவம், சிறிலங்கா சோனிக்காக்காமார். இருபத்து அஞ்சு லட்சத்து சொச்சம் சோனிக்காக்காமாரின் குரல்வளையை நூத்திசொச்சம் மொத்த வியாபாரிகள் நசுக்கி, ரோஸ்மிட் பிளெசிலும், சிறிகொத்தாவிலும் ஐந்து வருடத்துக்கொருமுறை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எப்ப வாப்பா நீங்க நிமிர்ந்து நிற்கப் போறியள்.


சாக்கிரதை – 2

இந்த உலகிலேயே புத்திசாலிகள் அதிகமாக உள்ள நாடு என்றால் சிறிலங்காதான். இந்த சிறிலங்காவிலும் ரொம்ப, அதிகமான புத்திசாலிகள் வாழும் பகுதிகளென்று வடகிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களைத்தான் சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டார்கள். இந்த வட, கிழக்கு மக்களிலும் வடக்கை சேர்ந்த, அதிலும் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய மேதாவிகள் இருக்கின்றார்களே, அவர்களின் மூளைதான் இந்த உலகத்திலேயே நம்பர் ஒன் மூளை. இந்த அதிபுத்திசாலிகள் ஒரு முப்பது வருஷம் தங்கள் மூளையை வைத்துக் கொண்டு காட்டிய மாயாஜாலங்கள் இருக்கிறதே.... அப்பப்பா.... கருவறைக்குள்ள இருக்கிற, கருக்களே கதி கலங்கியது.

2009 மேயுடன், இந்த அதிமேதாவிகளின் மாயாஜாலம் எல்லாம் அடங்கி, ஒடுங்கி, இப்போது புலம் பெயர் நாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு, மிஞ்சியுள்ள தமது கண்கட்டு வித்தைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் பலனை, முகாம்களிலும், சிறைகளிலும் உள்ள ஏதுமறியாத அப்பாவித் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டுமிருக்கின்றார்கள்.

இந்த புலம் பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, அங்கு நாட்டிலுள்ள தமிழர்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் இந்த அதி மேதாவிகளுக்கு சவால் விடும் இன்னுமொரு புத்திசாலிகள் கூட்டம் இருக்குதென்றால் அது கிழக்கிலுள்ள சிறிலங்கா சோனகர்களைத்தான் சொல்ல வேண்டும்.

அவர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய சரித்திரத்தை சொல்லிக் கொண்டு வந்து, இறுதியில் ஆண்ட பரம்பரை, அடங்குவதற்கு கூட இடமில்லாமல், முள்ளிவாய்க்காலில், முழந்தாளிட்டு மௌனமானார்கள், இவர்கள் ஒரு படி முன்னே போய், நாரே தக்பீர், அல்லாஹ் அக்பர் என கூறிக் கொண்டுவந்து, மொத்த சோனகனையும், தங்களது வாய்ச்சவடால்கள் மூலம் வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்போது, கோட்டும், டையும் கட்டிக் கொண்டு வன்னிக் காட்டுக்குள்ள இருந்த புலிகள், பேச்சு வார்த்தைகளுக்கென நோர்வேக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் கிளம்பினார்களோ, அப்போதே புலிக்கு சனி பிடித்து, கருணா அம்மானுக்கு கொடிபிடித்து, கேபி அண்ணாவுக்கு கிலி பிடித்து, முள்ளி வாய்க்காலில் முப்பதாயிரத்து சொச்சம் பேரை பலி எடுத்து, முழு சிறிலங்காவிலும் கில்லி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள், ஹம்மாந்தோட்ட சகோதரயாக்கள். அதனால் நாம அடக்கித்தான் வாசிக்கொணும். அமைதியாகத்தான் சாதிக்கணும்,

எனவே, முஸ்லீம் வாக்காளர்களே, நாளையிலிருந்து நாங்க கிழக்குக்கு வருவோம், வந்து கதை கதையாகச் சொல்லுவோம். நீங்கள் கேட்க வேண்டும். கை தட்ட வேண்டும். வெடில் கொழுத்த வேண்டும். ஆர்ப்பரிக்க வேண்டும். எமக்கெதிராக வாக்கு வேட்டையாடவரும் நமது சகோதர முஸ்லீமை விரட்ட வேண்டும், மிரட்ட வேண்டும், அதிக வாக்குகளால் எம்மை மட்டும் வெல்ல வைக்க வேண்டும். அதே பழைய கோஷங்களுடன்தான் வருவோம். நாரே தக்பிர் அல்லாஹ் அக்பர்.

பாவம் கிழக்கு சோனிகள். 1986களில் நாரேதக்பீர் சொல்லிக்கொண்டு வந்து வாக்கு வேட்டையாடிய அஸ்றப் ஹாஜியாரின், ரத்த சொந்தம், எம் எஸ் காரியப்பர், சேனநாயக்கா சமுத்திரத்துக்கு, கல்நாட்டி திறப்பு விழா வைத்துத்தான், 260 சிங்கள குடும்பங்களே வாழ்ந்த அம்பாரை மாவட்டத்தில், 1976ல் 18000 சிங்கள குடும்பங்கள் முளைத்தது. அப்புறம் தலைவர் வந்து சோனிகளுக்கெல்லாம் முகமும், முகவரியும் கொடுத்து, 2008ல் அம்பாரை மாவட்டத்தில் ரெண்டுலட்சத்தி சொச்சம் சிங்கள குடும்பங்கள் வாழ வழியேற்படுத்தி, மொத்த அம்பாரை மாவட்ட சோனிகளின் நெஞ்சில் பால் வார்த்தார்கள். மீண்டும் நாளைக்கு வரப்போகின்றார்கள். நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர்.

சாக்கிரதை – 3

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக, ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும், இடைப்பட்ட கட்சிகளும், மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக முஸ்லீம்கள் சாண் ஏறி முழம் சறுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு காலமாக நீங்களும் நாங்களும் ஒன்று, வாங்கோவன் தேரிழுப்பம் என்று சொன்ன, சொல்லிக் கொண்ட முன்னாள் தமிழ் தரப்புகள், தமிழ் கட்சிகள், தீவிர வாதப் போக்கு கொண்ட தமிழ் இயக்கங்கள், மாக்சிச, லெனினிஷ தமிழ் தோழர்கள், இந்த இணையத் தளங்களில் சோனிகள் மீது காறித் துப்புபவர்கள், பின்னூட்டம் என்ற பெயரில் முன்னோட்டம் பார்க்கும் ஆண்டபரம்பரை அனைவருமே, அனைத்து தரப்புமே அமைதியாக இருப்பதை பார்த்தால், நாங்க ஓள்றெடி நாக்அவுட், இனித்தான் ஒங்களுக்கு இருக்கு ஆப்பு என்பது போல் இருக்கின்றது. ஒருத்தனும் வாய்திறக்க காணோம்.

உண்மையும் அதுதான். முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல் நாங்க தமிழீழத்தை எடுப்போம் என பல வருடமாக கூறிக் கொண்டு வந்த, கூத்தமைப்பை தூக்கி வீசிவிட்டுத்தான், முள்ளை முள்ளால எடுக்க புறப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால் மைந்தர்களும், முரட்டு சிந்தனை வாதிகளும். இறுதியில் மகின்த மகராசன், முள்ளை கடப்பாறை கொண்டு அகற்றினார்.

அதே கூத்தமைப்பின் கதைகளை கூறிக் கொண்டுதான் இப்போது நம்முன் வேடதாரிகள் வர இருக்கின்றார்கள். முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல், நமது பிரச்சனைகளை எல்லாம் எடுத்துவிட்டு, செப்டம்பர் எட்டாம் திகதி இரவைக்கு தலைவர்கள் கொழும்புக்கு பறந்து விடுவார்கள். அப்புறம் தமது மேதாவித்தனங்களால், கட்சி மாறி, மகின்தவைக் கும்பிட்டு, பதவிகளை பெற்று, தமது சொந்த அறுவடைகளை அரங்கேற்றுவார்கள். சொந்தங்களுக்கும், சோரம் போனவர்களுக்கும் கோட்டாக்களும், கண்ட்றாக்ட்டுகளும் பறக்கும், சேனைக்குடியுருப்பு காசிம் பாவாவினதும், வளத்தாப்பிட்டி றசிது வட்டானவினதும், மூதூர் சின்னத்தம்பியினதும் காணிகள் பறிபோகும், தம்புள்ளவிலும், பேருவளையிலும் பள்ளிகள் இடிக்கப்படும், தலைவர்கள், முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல், பிரச்சனையை அரசுடன் புரியாணி சாப்பிட்டுக் கொண்டு பேசுவர். தலைவர்களின் சொத்து மதிப்பு கூடும், புதிதாக இன்னும் நாலைந்து காக்காமார் கோட்டும் டையும் கட்டுவர்.

சாக்கிரதை – 4.

இது, நாம் வாழ்வது சிங்கள பௌத்த நாடு. இந்த நாடு 2009 மே மாதத்துக்கு முன்னர் எப்படி இருந்ததோ தெரியாது. இப்போது இது சிங்கள பௌத்த நாடு. இங்கு இரண்டே இரண்டு ஜாதிதான் உண்டு. ஒன்று ஆண்சாதி, மற்றது பெண்சாதி. இந்த நாட்டின் தலைவர் திரு.மகின்த ராஜபக்க்ஷ. ஆப்புக்கு மேல ஆப்பு அடிச்சி, தன்னை சுற்றியுள்ள நாடுகளுக்கெல்லாம் ஆப்படித்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கே ஆப்படித்து, ஐம் அ கிங் போர் சிறிலங்கா என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு கிங் மேக்கர். சைனாவுடன் கைகோர்த்துக்கொண்டு, அமெரிக்கனுக்கும், ஐரோப்புக்கும், பாய்,பாய் சொல்லும் தானைத்தலைவன்.

1972 இல் நம்ம நாடு குடியரசானது. அந்த குடியரசு யாப்புல பகுதி இரண்டு, ஆறாம் உறுப்புரிமை சிறிலங்கா ஒரு பௌத்த நாடு என்றும், அந்த பௌத்த நாட்டை, உருப்படியாக வழி நடத்துவதும், பாதுகாப்பதும் அரசின் கடமை என்று கூறுகின்றது. அந்த யாப்பின் ஒரு மூலையில், சிறிலங்காவில் உள்ள மற்ற மதங்களையும், அதன் உரிமைகளையும் பாதுகாப்பது பற்றியும் கூறியுள்ளார்கள்.

நாம் இந்த நாட்டில் மூன்றாவது சிறுபான்மையினம். நம்மால் இந்த நாட்டில் எதைச் சாதிக்க முடியும்.

( தொடருவேன்..... )
aliyarmausook@ymail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com