Wednesday, July 18, 2012

பொன்சேகா UNP யில் இணைய வேண்டுமாயின் முதலில் தனது கட்சியை கலைக்கவேண்டுமாம்!

சரத் பொன்சேகா அவர்களிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதற்கான எந்தவித தெளிவான, முறைப்படியான விண்ணப்பமும் தமது கட்சிக்குக் கிடைக்கவில்லை யென்றும் அவ்வாறான விண்ணப்பம் கிடைக்குமாயின் அது பற்றி கட்சியின் நடைமுறைக்கேற்ப ​கட்சியின் செயலவையில் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கூறினார். பொன்சேகா அவர்கள் ஐதேகவில் சேர்வது பற்றிய பிரச்சாரங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். விரும்பிய எவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேரலாம் என்றும் அதற்கான விதிமுறைகள் உண்டென்றும் அவர் கூறினார்.

எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவரும் ஐதேகவில் சேர்வதாயின் அவர் தமது கட்சியைக் கலைத்துவிட்டு ஐதேகவில் சேரவேண்டும் என்றும் இது திரு பொன்சேகாவுக்கும் பொருந்தும் என்றும் திரு அத்தநாயக்கா தெரிவித்தார். பொன்சேகா அவர்களை ஐதேகவில் சேருமாறு முதலாவதாக வெளிப்படையான அழைப்பு விடுத்தவர்கள் தானும் திரு ஜோசப் மைக்கல் பெரேராவும் தான் என்றும் அதற்கு இன்றுவரை எந்த பதிலும் இல்லை யென்றும், அவ்வாறு செய்யாமல் திரு பொன்சேகா ஐதேகவில் சேர்வதாக பத்திரிகைகள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஊடாக பிரச்சாரம் செய்வது முறையான நடைமுறை அல்ல வென்றும் திரு அத்தநாயக்கா கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் பல பிரச்சினைகளுக்குள் மக்கள் தள்ளிவிடப்பட்டுளார்கள். நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக தமது தலைமைத்துவத்தின் கீழ் பல எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய எதிர்கட்சியாக செயல்பட்டு வருவதாகவும், நாடு பற்றியும் மக்கள் பற்றியும் சிந்திக்கும் எந்த அரசியல் கட்சியும் அந்த பொது வேலைத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் திரு அத்தநாயக்கா மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com