Wednesday, June 6, 2012

இன்றுமுதல் மாகம்புற துறைமுகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகள் ஆரம்பம்

இன்றுமுதல் மாகம்புற துறைமுகத்தில் வாகன இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகள் ஆரம்பமாகுமென இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக வாகன இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜப்பானிலிருந்து 15 வாகனங்களை கொண்ட கப்பல், இன்று மாகம்புற மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தை வந்தடையவுள்ளதுடன் மீள் ஏற்றுமதிக்காக ஆயிரம் வாகனங்களுடன் மற்றுமொரு கப்பல், இந்தியாவிலிருந்து இன்று மாகம்புற துறைமுகத்தை வந்தடைவதுடன், அதே தினத்தில், மீள் ஏற்றுமதிக்காக ஆயிரம் வாகனங்களை கொண்ட கப்பல் அல்ஜீரியாவை நோக்கி புறப்பட்டு செல்லுமெனவும், துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மஹிந்த சிந்தனைக்கமைய, துறைமுக துறையில் கேந்திர நிலையமாக மாகம்புற துறைமுகத்தினை மாற்றியமைக்கும் வரலாற்று நிகழ்வாக, இதனை கருதமுடியும் எனவும் துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

முதல் கட்டத்தில் தொழில்நுட்ப துறைமுகமாக கையாளுகைகளை ஆரப்பித்ததை தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில், இறங்குதுறை கையாள்கைகளையும் ஆரம்பிக்க திட்டமிடப் பட்டுள்ளதாவும், கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கூடுதலான நெரிசல்கள் காரணமாக, வாகன இறக்குமதி செயற்பாடுகளுக்கு கணிசமான செலவு ஏற்பட்டுள்ளதாகவும், மாகம்புற துறைமுகத்தின் வாகன இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவுள்ளதாகவும், துறைமுக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்காக தேவையான வசதிகள் மாகம்புற துறைமுகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வசதிகளை தொடர்ந்தும் விரிவுபடுத்தவும் ஏற்கனவே அது தொடர்பாக கடற்துறை சார்ந்த அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும், உயர்ந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வெற்றிகரமாக துறைமுக செயற்பாடுகளை முன்னெடுக்க, மாகம்புற துறைமுகத்திற்கு முடியுமென, இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment