Wednesday, May 16, 2012

இலங்கையில் எந்தவிதமான இனவாதசக்திகளும் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை-ஜனாதிபதி

இலங்கையில் எந்தவிதமான இனவாதசக்திகளும் தலைதூக்க தாம் இடமளிக்கப்போவதில்லை எனவும் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என எந்த இனத்தவராக இருந்தாலும், அனைத்து விதமான இனவாதத்தையும் நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகநிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புமிக்கவர்களாக செயற்படுமாறு ஊடகநிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஊடாக இனவாத ஆக்கக்கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் எனவும், நாட்டில் இனவாதசக்திகள் தலைதூக்க இடமளிக்காமல் ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானத்துடன் ஐக்கியமாக வாழ்வதையே காண தாம் விரும்புவதாக தெரிவித்த அவர், ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின்போது நாட்டுக்காக பொறுப்புடன் செயலாற்றிய சகல ஊடகங்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் பொறுப்புடன் செயலாற்றுவது அவசியமாகும் எனவும் இனங்கள், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்குக் காணப்படுகிறது எனவும், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகங்கள் நடந்துகொள்வது அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment