Sunday, May 20, 2012

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் அவசியமற்றது: திஸ்ஸர சமரசிங்க

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியமற்றது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு யுத்தம் தொடர்பான விடயங்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு படையினர் கடமையாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சரணடைந்த 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வு அளித்து, மீள சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின்; துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மக்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை நிலைமைகளை கண்காணிக்கும் இடமில்லை எனவும், எவரும் இலங்கைக்கு செல்ல தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment