Friday, May 18, 2012

கைவிடப்பட்ட சிசுவை பாணந்துறையில் குழந்தை இல்லத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு

நீர்கொழும்பில் உள்ள வீதியோரத்தில் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட 10 தினங்கள் கொண்ட சிசுவை பாணந்துறையில் உள்ள பிரஜா கோதமி குழந்தை இல்லத்தில்; ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம். பி. அமரசிங்க நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மூன்றாம் குறுக்குத் தெருவில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் கடந்த புதன் கிழமை இந்த ஆண் குழந்தை கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த உணவக உரிமையாளர் இரவு 9.30 மணியளவில் குழந்தையை வீதியோரத்தில் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் குழந்தையை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அன்று இரவு 10.40 மணியளவில் அனுமதித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போத, குழந்தையை பரிவாச அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் பாணந்துறையில் உள்ள பிரஜா கோதமி குழந்தை இல்லத்தில் ஒப்படைக்குமாறு பிரதான நீதவான் ஏ.என்.எம். பி. ஆமரசிங்க உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment