Sunday, May 27, 2012

பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மிஸ்: பள்ளிக் கல்வித்துறை

இந்தியாவில் அண்மைக்காலமாக ஆசியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது மிகவும் அதிகரித்து வருகின்றது. அண்மையில் இரு ஆசிரியைகள் மாணவர்கள் கூட்டிக்கொன்று ஓடிச்சென்ற சம்பவங்கள் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்கள் பாலியல்சேட்டையில் இறங்கினால் டிஸ்மில் செய்யப்படுவார்கள் என அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவு:

மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழி காட்டியாகவும் இருக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர் மாணவ- மாணவிகளிடம் ஒழுக்க கேடான முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் அதிக அளவில் வெளி வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ- மாணவியரிடம் ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.

டிஸ்மிஸ் நடவடிக்கை

பரிசீலனைக்கு பின் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி தவறான நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

அரசு பள்ளி ஆசிரியரை பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பள்ளி குழந்தைகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆலோசனை மையங்கள்

மாணவ-மாணவியரின் மனநிலை பிரச்சினைகளை களைய உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக் கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி மாணவ- மாணவியருக்கு விழிப்புணர்வு, ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment