Saturday, April 21, 2012

பொரளையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 33 பேர் கைது : எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு- பொரளை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொறல்லை, டி – 20 தோட்ட பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 தொடக்கம் 8 மணி வரை இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 8 பேர், கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த 4 பேர், உள்நாட்டில் உற்பத்தி செய்த ஆயுதங்களை வைத்திருந்த ஒருவர் மற்றும் கஞ்சா வைத்திருந்த மூவரும் இந்த இந்த சுற்றி வளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை,சிறைச்சாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் டி- 20 தோட்ட பொதுமக்கள் சிலர் இந்த சம்பவத்திற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில், வீதிகளை மறித்து டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அயலவர்கள் சிலரை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் திட்டமிட்டு கடத்திச் சென்று, போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நடத்திய போராட்டத்தினால் இதன் காரணமாக பேஸ்லைன் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

. இவர்களை களைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற் கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment