Wednesday, March 21, 2012

புலிகள் அமைப்பையும் பிரபாகரனையும் அழிக்குமாறு கூறியது இந்தியா என்கிறார் கருணா

புலிகள் அமைப்பையும். பிரபாகரனையும் அழிக்குமாறு கூறியது இந்தியா என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினை இலங்கைக்கு முன்னதாக இந்தியாவே தடை செய்தது. அது மாத்திரமின்றி புலிகள் அமைப்பையும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அழிக்குமாறு கூறிய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் இன்று எமது நாட்டின் மீது யுத்தக் குற்றம் சுமத்துவதாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பினை சர்வதேச நாடுகள் தான் முதலில் தடை செய்தன. அதில் இந்தியாவே முதன் முதலாக விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் சர்வதேச நாடுகள் தடை செய்தன. இருப்பினும் உள்நாட்டு விடயம் என்பதால் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை அரசு வழங்கியது. அதற்கும் ஒத்துவராத நிலையிலேயே இறுதியாக இலங்கை அரசு புலிகளை தடை செய்தது. அந்த வகையில் புலிகளுடனான யுத்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பினரையும் அதன் தலைவர் பிரபாகரனையும் அழிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக கூறி வந்தன. அத்துடன் உதவிகளும் வழங்கின. பல நாடுகள் பிரபாகரனை பயங்கரவாதியாகப் பார்த்தன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது பிரபாகரனுக்கு மரண தண்டனையையும் விதித்தது.

இலங்கைக்கு பிரச்சினை என்று ஒன்று வருமாயின் அது அனைத்து மக்களையுமே பாதிக்கும். கடந்த காலங்களில் நாம் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்நாட்டில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவில்லை.

ஆனால் ஈராக், லிபியா போன்ற நாடுகளில் மனிதப் படுகொலைகள் செய்யப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்ற போதிலும், அங்கு இன்றும் கூட ஆங்காங்கே தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை.

எனவே பயங்கரவாதத்தை இல்லா தொழித்த ஜனாதிபதியின் பயணத்துக்கு எமது ஒத்தழைப்பினை வழங்க வேண்டும். இதனை சகல தலைவர்களிடத்திலும் வலியுறுத்துகிறேன்.

எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை சகித்துக் கொள்ளமுடியாததன் காரணத்தினாலேயே நெருக்குதல்கள் வருகின்றன. எமது நாடு தொடர்பான விடயத்தில் நாம் விழிப்பாக செயற்பட வேண்டியவர்களõக இருக்கின்றோம்.

ஜெனீவாவுக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கோ நாம் எதிரானவர்கள் அல்லர். இந்த அமைப்புக்களின் கருத்துக்களை நாம் ஏற்கின்றோம். எனினும் எமது தெளிவாகத்தை நாம் கூற வேண்டியுள்ளோம் என்றார்.

1 comment:

  1. karuna karuna than, thalaivarai konrathu karunathan, unai kolla oruvan varuvan

    ReplyDelete