Saturday, March 31, 2012

ரஷ்யாவில் உள்ள இந்து கோவில் ஒன்றை இடிக்க ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு.

ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில் கடந்த 1992-ம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளருடன் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும் 20 ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த கோவிலில் சமஸ்கிருதம், யோகா உட்பட கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதைக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கோவிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை ஒன்றை அனுப்பி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment