Friday, February 3, 2012

யாழ்.ஊர்காவற்துறைக்கான புதிய பிரதேச சபைக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச சபை தலைமைக் காரியாலய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதி மகிந்த சிந்தனை வழிகாட்டலினூடாக உள்ளுராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் உள்ளுராட்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இது நிர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் 520 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களில் முதலாவது கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் 27 மில்லியன் ரூபாவில் செலவில் கட்டிமுடிக்கப்பட்டள்ளது.

விருந்தினர்கள் பிரதான வீதியூடாக மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

முதலில் பெயர்ப் பலகையும், நினைவுக் கல்லும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

மேலும் ஊர்காவற்துறை பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களும், புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் பொறியியலாளர்கள் மற்றும் தற்போதைய தலைவர் உட்பட பலர் விருந்தினர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழ மக்கள் ஜனாநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன்,

வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மரியசீலன் ஜெகு, பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகனன்,

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரஜீவ், வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, வேலணை பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com