Friday, February 3, 2012

நீதிமன்ற கைதியறையில் கைதி மரணம்: மக்கள் ஆர்ப்பாட்டம். பதட்டத்தை தணிக்க இராணுவம்!

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கைதி அறையில் கைதியொருவர் மரணமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் எதிப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை யில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை அக்கரைப்பற்று பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதிமன்ற கைதிகளின் அறையில் வைத்து மரணமடைந்துள்ளார்.

.இம்மரணம் பொலிஸாரின் தாக்குதலினாலேயே ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய எதிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டாளைச்சேனையை சேர்ந்த 40 வயதான இந்த நபர் மாரடைப்பால் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சந்தேக நபர் இன்று காலை 8 மணியளவில் 8 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்காக 10 மணியளவில் நீதிமன்றக் கைதிக்கூண்டில் வைக்கப்பட்டதாகவும், 11 மணிக்கு அவர் நீதவான் முன்னிலையில் ஆஜராகுவதற்கு அழைக்கப்பட்டபோது, அவர் வரவில்லை எனவும், அதன்பின் அதிகாரிகள் கைதி அறைக்குள் சென்று பார்த்த போது, அச்சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதுவாயினும் அட்டாளைச்சேனைப்பகுதியில் நிலவும் பதட்டத்தினை தணிக்க அங்கு மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com