Thursday, February 23, 2012

அமெரிக்க தூதரக மின்னஞ்சல் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஜெனிவாவிலிருந்து சமரசிங்க.

ஜெனீவா மாநாடு நடைபெற இன்னும் சில தினங்கள் எஞ்சியிருக்கும் வேளையில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ள அரசாங்கம் அமெரிக்காவின் இச்செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள  இலங்கை பிரிதிநிதிகள் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை சுயாதீன தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவிக்கையில் , தாம் நேற்று ஜெனீவாவுக்கு சென்றிருந்த போது, ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அதில் ஒரு பிரேரணை தொடர்பாக எம்மோடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகமூடாக தெரிவிக்கப்பட்டிருந்தது எனக்குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட பிரேரணை தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சுடனோ, வேறு எந்த தரப்பினருடனோ தாம் எந்தவிதமான பேச்சுவார்த்தையினையும் நடாத்தவில்லை எனத் தெரிவித்துள்ளதோடு குறிப்பிட்ட மின்னஞ்சல் செய்தி தொடர்பில் தாம் அதிசயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பாக பிரேரணைகளை கொண்டு வர வேண்டிய எவ்வித தேவையும் இல்லையென்பதையே நாங்கள் வலியுறுத்தி வந்தோம் எனக் கூறியுள்ள அமைச்சர் சமரசிங்க அமெரிக்க தூதரகத்தினுடனோ, வேறு எந்த தரப்பினருடனோ நாம் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. அவ்வாறு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டிய எவ்வித தேவையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறான ஒரு பிரேரணைக்கு எவ்விதத்திலும் நாம் ஆதரவு வழங்க தயாரில்லையென்பதை, தெரிவிக்கின்றோம் எனவும் பிழையான ஒரு தகவலை பரப்பி, இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இதற்கு ஆதரவு திரட்டுவதற்கான ஒரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளதுடன் அதற்கு முகங்கொடுத்துள்ளோம். எதிர்காலத்திலும், முகங்கொடுக்க தயாராகவும் உள்ளோம் என அரசாங்கத்தின் சார்பில் நான் கூற விரும்புகின்றேன் என சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com