Thursday, February 23, 2012

செக்ஸ் குற்ற கைதிகளுக்கு காயடிப்பு: உடனடியாக நிறுத்தும்படி கோரிக்கை

ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு நடத்தப்படும் காயடித்தல் அறுவை சிகிச்சையை, உடனடியாக நிறுத்தும்படி ஐரோப்பிய கவுன்சில் வலியுறுத்தி யுள்ளது. ஜெர்மனியில், பாலியல் குற்றவாளிகளுக்கு காயடித்தல் அறுவை சிகிச்சை பல்வேறு கடுமையான விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது இந்த சிகிச்சை நடத்தப்பட்டு விடும். மருத்துவ ரீதியாக இவர்கள் முடக்கப்படுவர்.

இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சிலின், சித்திரவதைக்கு எதிரான கமிட்டி நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,"ஜெர்மனியில் இது எப்போதாவது நடந்தாலும் கூட அது உறுப்பழிவுக்கு வித்திடுகிறது. பாலியல் குற்றவாளிகளை நடத்தும் விதத்தில், அதற்கு மருத்துவ ரீதியில் அவசியமும் இல்லை. மனநிலையில் மிக மோசமான பாதிப்புகளை இது ஏற்படுத்தி விடுகிறது. அதனால் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' எனக் கோரியுள்ளது.

கவுன்சிலின் இந்தக் கோரிக்கை ஜெர்மனியைக் கட்டுப்படுத்தாது என்று கூறப்படுகிறது. கடந்த 2009லும் இதேபோன்ற கோரிக்கையை கவுன்சில் விடுத்தும் அமலாகவில்லை. செக் குடியரசு நாட்டில் தற்போதும் இந்த நடைமுறை உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டு நடைமுறைகள் இம்மாதிரி இன்னமும் ஐரோப்பாவில் இருப்பது பலரையும் வியக்கவைத்திருக்கிறது.

1 comment:

  1. இவர்களா இலங்கைக்கு மனித உரிமைகள் பற்றி போதிப்பது ? என்ன தகுதி உள்ளது இவர்களுக்கு ?

    ReplyDelete