Friday, February 17, 2012

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் – ஐரோ.ஒன்றியம் அறிவிப்பு!

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலர் கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றித்தின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் தூதுவருமாகிய பேர்னாட் செவேஜ் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 2.4 பில்லியன் ரூபாவை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

S.E.M என்ற உதவி திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களி்ல் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை 2014 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் பேர்னட் செவேஜ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாகாணங்களை மீள கட்டியெழுப்புதல் மற்றும் மறுசீரமைப்பதனை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கட்டமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னோடி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தவிர வட மாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களிலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலும் இந்த திட்டத்தை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment