Monday, February 13, 2012

டெல்லியில் இஸ்ரேலிய தூதர் கார் தீப்பிடித்து வெடித்தது! 3 பேர் காயம்.

ஹெஸ்புல்லா மீது சந்தேகம்.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் தீப்பிடித்து வெடித்ததில்; 3 பேர் காயமடைந்தனர். பிரதமர் வீடு அமைந்து இருக்கும் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை அருகே உள்ள அவுரங்கசீப் சாலையில் சிக்னலுக்காக நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேல் தூதரக அதிகாரியின் இன்னோவா கார் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது.

இதில் தூதரக அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடித்தது வெடிகுண்டாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் காரில் உள்ள சிஎன்ஜி சிலிண்டர் வெடித்து சிதறி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வெடித்தது எந்த வகையான பொருள் என்பது குறித்து அப்பகுதியை முற்றுகையிட்டுள்ள போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இஸ்ரேலிய தூதரக அதிகாரி வந்த காரை 2 மோட்டார் சைக்கிள்களில் இரண்டு இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்ததாகவும், அவர்கள் சிக்னலுக்காக இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் நின்றபோது, காரின் பின்பக்கம் எதையோ வைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் தனது தூதரக அதிகாரியின் கார் வெடிப்புக்கு ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லாதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

1 comment: