Monday, January 30, 2012

‘தேசத்திற்கு மகுடம்' கண்‌காட்சி பெப். 4ஆம் திகதி ஆரம்பம்

தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி கண்காட்சி அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை, ஓயாமடு பிரதேசத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

தேசிய கண்காட்சி மற்றும் அதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தந்திரிமலை பகுதியிலுள்ள 600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களுடன் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மாலை ஜனாதிபதி அவர்களினால் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி கூடங்கள் திறந்திருக்கும்.

பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கண்காட்சியை இலவசமாக பார்வையிட தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோர் நுழைவாயில் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி சீட்டை பெற்றே நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம்(தயட்ட கிருள) கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment