Saturday, January 7, 2012

இந்தியப் பெண்ணைக் கற்பழித்த வருக்கு அமெரிக்க கோர்ட் விதித்தது 32 ஆண்டுசிறை

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை கற்பழித்த, தனியார் துப்பறியும் நிறுவன ஊழியருக்கு, அமெரிக்க கோர்ட், 32 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ஜெர்ரி ராம்ரட்டன், 39. இவருக்கு சம்சார், 36 என்ற பெண் தோழி உண்டு. இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கடந்த 2009ல் துப்பாக்கி முனையில் சம்சாரை, ஜெர்ரி கற்பழித்தார்.

இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, மேலும் சிலருடன் சேர்ந்து சதி செய்து, வழிப்பறியில் ஈடுபட்டதாக சம்சார் மீது பொய் புகார் சுமத்தினார். இதற்காக போலியாக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, காரில் வந்தவர்களை துப்பாக்கி முனையில் மறித்து கொள்ளையடித்ததாக சம்சார் மீது புகார் கூறினார். இந்த வழக்கில் சம்சாருக்கு ஏழு மாத தண்டனை கிடைத்தது.

இதற்கிடையே, கற்பழிப்பு புகார் மீதான வழக்கு சமீபத்தில் நியூயார்க் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில், ஜெர்ரி, சம்சாரை கற்பழித்ததும், இதன்பின் அவரை, பொய் வழக்கில் சிக்க வைத்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நீதிபதி அளித்த தீர்ப்பில், "ஜெர்ரி, மிகக் கொடூரமான குற்றத்தை செய்துள்ளார். அவர் மீது எந்த வழியிலும் கருணை காட்ட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை, தனக்கு சாதகமாக, தவறாக பயன்படுத்தியுள்ளார். இவருக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார்.

இதற்கிடையே, தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்து, சிறைக்கு அனுப்பிய போலீசாருக்கு எதிராக, சம்சார் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com