Thursday, January 26, 2012

17 வயது மாணவி கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை - பருத்தித்துறையில் சம்பவம்

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதய நாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாணவி தனது வீட்டுக்கு அண்மையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சக்கோட்டைப் பழைய வேதக் கோயிலடிக்கு அருகில் அவரது வீடு உள்ளது. வீட்டில் இருந்த மாணவியின் தாயும் தகப்பனும் அலுவல் நிமித்தம் வெளியே சென்றுள்ளனர்.

இந்த வேளையில் மாணவி அயலில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மாலை 6.30 முதல் மாலை 6.45 மணி வரையான இடைப்பட்ட நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மாணவி பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com