Wednesday, December 7, 2011

ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகளை சவூதிக்கு திருப்பியனுப்பும் பாகிஸ்தான்

கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 2 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பாகிஸ்தான் தனி விமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் அப்போத்தாபாத்தில் வைத்து அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன. அதன் பிறகு அவருடைய 2 மனைவிகள் மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் பாகிஸ்தானிலேயே தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் விசாரணை முடிந்துள்ளாதாகவும் அவர்களை தனி விமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னும் 2 நாட்களில் அவர்கள் சவூதிக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும், அந்த தேதியை பாகிஸ்தான் அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளதாகவும் அல் ஹயாத் அரபு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தனக்கு எந்தவித அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை என்று பாகிஸ்தானு்ககான சவூதி தூதர் அப்துல் அஜீஸ் இப்ராகிம் அல் காதீர் தெரிவித்துள்ளார்.

ஒசாமாவின் மூத்த சகோதரர் பக்ர் பின் லேடன் தனது தம்பி குடும்பத்தாரை திருப்பி அழைத்துக் கொள்ள அனுமதி தருமாறு சவூதி மன்னர் அப்துல்லாவை கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மன்னரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஒசாமா குடும்பத்தாரின் சவூதி குடியுரிமை கடந்த 1994ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


...............................

No comments:

Post a Comment