Friday, December 16, 2011

ஏ.எல். பெறுபேறுகள் திங்கள் வெளிவரும் - எஸ்.பி. , வெளிவராது - பரீட்சைகள் திணைக்கள அதிகாரி

2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படுமென உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆயினும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமை வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பரீட்சைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமை வெளி யாகும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்க பாராளுமன்றில் இன்று காலை தெரிவித்திருந்தமை தொடர்பில் கேட்டபோதே வீரகேசரி இணையத்தளத்திற்குத் பரீட்சைகள் திணைக்கள அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்பட்டுள்ள போதிலும் பல்கலைக்கழகத்திற்கான இஸட் புள்ளிகள் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இஸட் புள்ளிகள் தொடர்பாக அறிவிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை அதற்கான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அடுத்த வாரம் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2011 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம் வெளியிடப்பட மாட்டாது எனவும், இஸட் புள்ளிகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை அறிவிக்காமையே இதற்குக் காரணம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.

புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் தொடர்பான இஸட்புள்ளி விவகாரம் தொடர்பான தமது முடிவை அறிவிக்குமாறு 3 மாதங்களுக்கு முன்னர் தான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தான் கூறியிருந்ததாகவும் ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை எனவும் என பரீட்சைகள் ஆணையாளர் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படுமென உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment