Friday, December 9, 2011

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாவது தாமதமாகும்

இந்த வாரம் வெளியாகவிருந்த 2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இஸட்கோர் தொடர்பான விபரம் காரணமாக தாமதமடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்ற புள்ளிகளை இஸட் புள்ளிகளாக மாற்றுவதற்கான வாய்ப்பாடு தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படாதுள்ளமையால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதமடையுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த வார இறுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வெளியிட இயலாது போனமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் திணைக்களத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் z புள்ளிக் கணக்கெடுப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் திடீரென வந்தப் பிரச்சினை அல்ல எனவும், பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களில் பரீட்சை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது z புள்ளி கணக்கெடுப்பு தொடர்பிலும் திட்டங்களை தீட்டியிருக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் காணப்படும் செயற்திறனின்மையே உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவர தாமதமாகியுள்ளமைக்கான காரணம் எனவும் அச்சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment